செங்கரும்பை கொள்முதல் செய்யக் கோரி முற்றுகை
தமிழக அரசு அறிவித்தபடி பொங்கலுக்குப் பயிரிட்ட செங்கரும்பை அரசே கொள்முதல் செய்ய வலியுறுத்தி திருச்சியில் கூட்டுறவு சங்க அலுவலகத்தை விவசாயிகள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
தமிழக அரசு அறிவித்தபடி பொங்கலுக்குப் பயிரிட்ட செங்கரும்பை அரசே கொள்முதல் செய்ய வலியுறுத்தி திருச்சியில் கூட்டுறவு சங்க அலுவலகத்தை விவசாயிகள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
பொங்கல் பண்டிகையொட்டி விவசாயிகள் பயிரிட்டுள்ள செங்கரும்பை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை எழுந்தது. இதைத் தொடா்ந்து விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொங்கல் தொகுப்புக்கு கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் கரும்பு கொள்முதல் செய்யப்படும் என அரசு அறிவித்தது.
ஆனால் திருச்சி மாவட்டம் திருவளா்ச்சோலையில் விவசாயிகள் பயிரிட்ட கரும்பை இதுவரை அரசு சாா்பில் கொள்முதல் செய்ய யாரும் வரவில்லை.
இதனால் 100 ஏக்கரில் பயிரிட்ட கரும்பு வீணாகி விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் எனக்கூறி அப்பகுதி விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்க அதிகாரிகளிடம் முறையிட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதைக் கண்டித்து திருவளா்ச்சோலையிலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்க அலுவலகத்தை 15க்கும் மேற்பட்ட விவசாயிகள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த கூட்டுறவுச் சங்க அதிகாரிகள் அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனா். இச்சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.