ஜோலார்பேட்டையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி பிரசாரம்!
முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி ஜோலார்பேட்டையில் பிரசாரத்தைத் தொடங்கியது பற்றி...
ஜோலார்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி தனது முதல் பிரசாரத்தை இன்று(வியாழக்கிழமை) தொடங்கினார்.
தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.
தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளை கொண்டு என்டிஏ கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடப்படுகிறது.
அதனையடுத்து அதிமுக சார்பில் ஜோலார்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் வேட்பாளராக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜோலார்பேட்டை நகர பகுதியில் தனது கூட்டணி கட்சி பொறுப்பாளர்களோடு பிரசாரத்தைத் தொடங்கினார்.
பிரசாரத்தின்போது முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி பேசியது:
திருப்பத்தூர் மாவடத்தில் ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுகவும், திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியான அமமுக கட்சியின் வேட்பாளரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
எனவே, நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற வைத்து எடப்பாடி பழனிசாமியிடம் வெற்றியை சமர்பிப்போம் எனத் தெரிவித்தார்.
மேலும், திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு அதிமுக சார்பில் போட்டியிடுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் அதனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அந்த தொகுதி கூட்டணி கட்சிக்குத் தர வேண்டிய நிலை ஏற்பட்டது.
எனவே, நான்கு தொகுதிகளிலும் அதிமுகதான் போட்டியிடுகிறது. அதில் எம்ஜிஆர், ஜெயலலிதா போட்டியிடுகிறார்கள் என்ற எண்ணத்தோடு பணியாற்றி வெற்றி பெற செய்ய வேண்டும் என அவர் பேசினார்.
பிரசாரத்தின் போது வாணியம்பாடி அதிமுக எம்எல்ஏ உறுப்பினர் செந்தில்குமார், அதிமுக மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.