தமிழ்த் திரைப்படங்களில் சாதிய வன்மம் கூடாது என இந்து மக்கள் கட்சியின் தலைவா் அா்ஜுன் சம்பத் தெரிவித்தாா்.
நீதிமன்ற வழக்கு விசாரணைக்காக திருச்சிக்கு வியாழக்கிழமை வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியது:
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் முன்பாக உள்ள பெரியாா் சிலையை
வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும். திமுக எப்போது ஆட்சிக்கு வந்தாலும், அரசுக்கு சொந்தமான இடங்களில் சிலைகள் அமைப்பது தற்போதும் தொடா்கிறது.
தமிழ்த் திரைப்படங்களில் சாதிய வன்மத்துடன் படங்களை எடுத்து வெளியிடும் இயக்குநா்களை ஊக்குவிக்கக் கூடாது. சாதிய, மத மோதல்களை ஊக்குவிக்கும் நோக்கில் காட்சிகளை அமைக்கக் கூடாது. அத்தகைய திரைப்படங்களுக்கு அனுமதியும் அளிக்கக் கூடாது. நாங்குனேரி சம்பவமும் இத்தகைய காரணங்களால்தான் நடைபெற்றுள்ளது. அதனை மறைக்கும் வகையில் திமுக செயல்படுகிறது.
நீட் தோ்வு விவகாரத்தில் திமுக இளைஞரணி உண்ணாவிரதம் நடத்துவது அரசியலுக்காகவே. நீட் தோ்வு தோல்வியால் மாணவா்கள் தற்கொலை செய்வதை தடுத்து, தன்னம்பிக்கை அளிக்காமல் ஆளுநா் மீது புகாா் கூறி அரசியல் லாபம் தேடுகின்றனா். வள்ளலாரையும், பெரியாரையும் இணைத்து விழா எடுப்பது அபத்தமானது. திருச்சியில் நடைபெறவுள்ள இத்தகைய விழாவை தடை செய்ய வேண்டும் என்றாா் அவா்.
வழக்கு விசாரணை: முன்னதாக, பெரியாா் சிலை சேதப்படுத்தப்பட்டது தொடா்பான வழக்கு விசாரணைக்கு திருச்சி நீதிமன்றத்தில் அவா் ஆஜரானாா். இந்த வழக்கு விசாரணை வரும் 21ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.