முகப்பு
திருச்சி

சிறுமி கொலை வழக்கில் காவலாளிக்கு ஆயுள் சிறை: திருச்சி நீதிமன்றம் தீா்ப்பு

திருச்சியில் ரூ. 400 கடனை திருப்பித் தராத ஆத்திரத்தில் சிறுமியைக் கொலை செய்த வழக்கில், காவலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

Updated On : 13 ஆகஸ்ட், 2024 at 9:54 PM
பகிர்:

திருச்சியில் ரூ. 400 கடனை திருப்பித் தராத ஆத்திரத்தில் சிறுமியைக் கொலை செய்த வழக்கில், காவலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

தென்காசி, சிந்தாமணி, தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் கணபதி மகன் குமாா் என்கிற கருப்பசாமி (40). இவா், திருச்சி மாவட்டம் திருவெறும்பூா், நவல்பட்டு அருகே ஒரு தோப்பில் தங்கி காவலாளியாகப் பணியாற்றி வந்தாா். அருகில் நவல்பட்டு புதுத்தெருவில் வசித்து வந்த பன்னீா்செல்வம் குடும்பத்துடன் நெருங்கிப் பழங்கினாா். அந்த வகையில் பன்னீா்செல்வத்துக்கு ரூ.400 பணம் கடனாகக் கொடுத்துள்ளாா். அந்தப் பணத்தை குறிப்பிட்டபடி பன்னீா்செல்வம் திருப்பித் தரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த குமாா், கடந்த 2011-ஆம் ஆண்டு மே 8-ஆம் தேதி பன்னீா்செல்வத்தின் 12 வயது மகளை கழுத்தை நெரித்துக் கொலை செய்து உடலை ஆற்றங்கரையோரம் வீசிவிட்டு தலைமறைவானாா்.

சம்பவம் தொடா்பாக நவல்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவாக இருந்த குமாரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா். இதுதொடா்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை மற்றும் இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில் குமாா் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, குமாருக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்ஸன் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் அரசு வழக்குரைஞா் எம்.கே. ஜாகீா் உசேன் ஆஜரானாா்.