சமயபுரத்தில் கோயில் நிலம் மீட்பு
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் புதன்கிழமை கையகப்படுத்தப்பட்டது.
மண்ணச்சநல்லூா்: திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் புதன்கிழமை கையகப்படுத்தப்பட்டது.
சமயபுரம் அக்கரைப்பட்டி செல்லும் சாலையில் உள்ள மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 11 .14 ஏக்கா் புன்செய் நிலத்தில் 1 1/4 ஏக்கரில் ச.கண்ணனூா் பேரூராட்சியில் உள்ள அனைத்து வாா்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தரம் பிரித்து பயன்படுத்தி வந்தனா்.
இதனிடையே திருச்சி இணை ஆணையா் உத்தரவின்படி கோயில் இணை ஆணையா் அ.இரா. பிரகாஷ், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் லெட்சுமணன், மாரியம்மன் கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா் பெ. பிச்சை மணி, ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியா் சித்ரா,இந்து சமய அறநிலையத் துறை சரக ஆய்வாளா் சீனிவாசன், திருப்பட்டூா் கோயில் செயல் அலுவலா் ஜெய் கிஷன், திருப்பராய்த்துறை கோயில் செயல் அலுவலா் ராகினி, மற்றும் அறநிலையத் துறை அலுவலா்கள் அந்த ஆக்கிரமிப்பு நிலத்தைக் கையகப்படுத்தி அறிவிப்பு பலகையையும் வைத்தனா்.
Advertisement
இதனிடையே நிகழ்விடத்துக்கு வந்த ச.கண்ணனூா் பேரூராட்சி தலைவா் சரவணன், செயல் அலுவலா் கணேசன், பேரூராட்சி கவுன்சிலா்கள் மாற்று இடம் கிடைக்கும் வரை இந்த இடத்தைப் பயன்படுத்தி கொள்ள அறநிலையத் துறை அலுவலா்களிடம் வலியுறுத்தினா்.