குடியாத்தம் நகர்மன்றத் தலைவர் தேர்தல்: அதிமுக வெற்றி
குடியாத்தம், ஜன. 29: வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகர்மன்றத் தலைவர் பதவிக்கான இடைத் தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த எம். பாஸ்கர் (43) வெற்றிபெற்றார். கடந்த 2006 ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது குடி
குடியாத்தம், ஜன. 29: வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகர்மன்றத் தலைவர் பதவிக்கான இடைத் தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த எம். பாஸ்கர் (43) வெற்றிபெற்றார்.
கடந்த 2006 ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது குடியாத்தம் நகராட்சி 17-வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டு நகர்மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.எஸ். சிவப்பிரகாசம் அதிமுகவில் சேர்ந்து நகர்மன்றத் தலைவரானார்.
அரசு விழா ஒன்றில் அமைச்சர் துரைமுருகனுக்கு சால்வை அணிவித்ததையடுத்து சிவப்பிரகாசம் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் அவர் திமுகவில் சேர்ந்தார்.
Advertisement
Advertisement
இந்நிலையில் அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர 29 நகர்மன்ற உறுப்பினர்கள் வேலூர் மண்டல நகராட்சிகளின் இயக்குநரிடம் மனு அளித்தனர். இதையடுத்து சிவப்பிரகாசம் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் அவர் தலைவர் பதவியை இழந்தார்.
இதையடுத்து தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. அதைத் தொடர்ந்து தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வேலூர் கோட்டாட்சியர் கே. பொன்னுசாமி மேற்பார்வையில், நகராட்சி ஆணையர் ஆர். சுப்பிரமணியன் தேர்தலை நடத்தினார்.
அதிமுக சார்பில் எம். பாஸ்கரும், திமுக சார்பில் எஸ்.டி. யுவராஜும் போட்டியிட்டனர்.
36 உறுப்பினர்களைக் கொண்ட நகர்மன்றத்தில் கட்சிவாரியாக உறுப்பினர்கள் விவரம்:
அதிமுக- 18, திமுக-8, காங்கிரஸ்-2 ,முஸ்லிம்லீக்-2, மதிமுக-1, பாமக-1, சுயேட்சைகள்-3, காலியிடம்-1.
34 உறுப்பினர்கள் தேர்தலில் வாக்களித்தனர். இதில் 24 பேர் பாஸ்கருக்கு ஆதரவாகவும், 10 பேர் யுவராஜுக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர். முன்னாள் தலைவர் ஆர்.எஸ். சிவப்பிரகாசம் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
வெற்றிபெற்ற பாஸ்கருக்கு ஆணையர் சுப்பிரமணியன் சான்றிதழ் வழங்கினார்.
பின்னர் பாஸ்கர் கட்சியினருடன் ஊர்வலமாகச் சென்று எம்.ஜி.ஆர், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்தார்.
மாவட்டச் செயலர் கே.சி. வீரமணி, மாவட்ட அவைத் தலைவர் டி.கே. முருகேசன், நகரச் செயலர் ஜே.கே.என். பழனி, அவைத் தலைவர் வி.என். தனஞ்செயன், மாவட்ட விவசாய பிரிவுச் செயலர் வி. ராமு, மதிமுக மாவட்டச் செயலர் என். பன்னீர், ஜெ. பேரவை மாவட்டச் செயலர் ஆர். பாலசுப்பிரமணி, இளைஞர் அணிச் செயலர் ஏ. டில்லிபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தலைவராக தேர்வு செய்யப்பட்டுóள்ள பாஸ்கர் 2001 முதல் 2006 வரை நகர்மன்ற துணைத் தலைவராகவும், அதிமுகவின் நகர துணைச் செயலராகவும் பணியாற்றியவர்.
பிளஸ் 2 வரை படித்துள்ள இவருக்கு மனைவி ராணி, மகன் இளவரசன் உள்ளனர். இவரது தந்தை எஸ். மாயன் முன்னாள் நகர அதிமுக செயலராவார்.