முகப்பு
வேலூர்

பாதுகாப்பற்ற நிலையில் குழந்தைகள் நல மையம்

வந்தவாசி, செப். 15: மேற்கூரையில் ஓட்டை, விரிசல்களுடன் கூடிய சுவர்கள் என பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது தென்சேந்தமங்கலத்தில் உள்ள குழந்தைகள் நல மையம். வந்தவாசி ஊராட்சி ஒன்றியம் தென்சேந்தமங்கலம் ஊராட்சிக்

Updated On : 27 டிசம்பர், 2023 at 5:31 PM
பகிர்:

வந்தவாசி, செப். 15: மேற்கூரையில் ஓட்டை, விரிசல்களுடன் கூடிய சுவர்கள் என பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது தென்சேந்தமங்கலத்தில் உள்ள குழந்தைகள் நல மையம்.

வந்தவாசி ஊராட்சி ஒன்றியம் தென்சேந்தமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட காலனி பகுதியில் குழந்தைகள் நலமையம் செயல்பட்டு வருகிறது. ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இந்த மையம் செயல்பட்டு வருகிறது.

இதில் காலனி பகுதி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த இரண்டரை வயது முதல் 4 வயது வரையிலான சுமார் 25 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இம்மையத்துக்கு வரும் குழந்தைகளை கவனிக்க ஒரு ஆசிரியையும், ஒரு சமையலரும் பணியாற்றி வருகின்றனர். இந்த மையத்தின் கட்டடத்தில் ஒரு சமையலறையும், ஒரு வகுப்பு அறையும் உள்ளன.

இங்குள்ள சமையல் அறையின் மேற்கூரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் அளவுக்கு சேதம் அடைந்ததால் சமையலறை ஏற்கெனவே பூட்டப்பட்டுள்ளது. இதனால் வகுப்பறையின் ஒரு பகுதியில் சுவர் எழுப்பப்பட்டு, அங்கே சமையல் செய்யப்பட்டு வருகிறது.

வகுப்பறையின் மேற்புறம் சிமெண்ட் ஓடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் சுமார் 2 அடி விட்டமுள்ள ஓட்டை விழுந்துள்ளது. மேலும் சில இடங்களில் சிறிய அளவிலான ஓட்டைகளும் உள்ளன.

கட்டடத்தை சுற்றியுள்ள சுவர்களிலும் விரிசல்கள் காணப்படுகின்றன. மழைக்காலங்களில் சுவரில் உள்ள ஓட்டைகளின் வழியே, அறையின் உள்ளே மழைநீர் நிரம்புவதால் அறையின் ஏதாவது ஒரு மூலையில் குழந்தைகள் ஒதுங்க வேண்டிய பரிதாப நிலை ஏற்படுகிறது.

இதனால் மழைக்காலங்களில் இந்த மையத்துக்கு தங்கள் குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக இந்த கட்டடம் சேதம் அடைந்த நிலையில் இருப்பதாகவும், இதுகுறித்து புகார் தெரிவித்தும் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மழைகாலம் நெருங்கி வரும் நிலையில் இந்த ஆண்டிலாவது குழந்தைகள் நலமைய கட்டடத்தை உடனடியாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப் பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →