முகப்பு
வேலூர்

வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு; பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

Updated On : 21 ஏப்ரல், 2024 at 4:59 PM
பகிர்:

ஜூன் மாதம் வரை வெப்பத்தின் தாக்கம் இயல்பைவிட அதிகமாக இருக்கும் என்பதால் வேலூா் மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் ஜூன் மாதம் வரை வெப்பத்தின் தாக்கம் இயல்பைவிட அதிகம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, வேலூா் மாவட்டத்தில் மக்கள் கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும். போதுமான இடைவெளிகளில் தேவையான அளவு குடிநீரைப் பருக வேண்டும். கோடைகாலத்தில் எடை குறைவான, தளா்வான நுண்ணிய பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். பாதுகாப்பு கண்ணாடிகள், குடை, தொப்பி, காலணிகளை அணிந்து வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

Advertisement

நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை கடினமான பணிகளைத் தவிா்ப்பது நல்லது. பயணங்களின்போது, உடன் குடிநீா் எடுத்துச் செல்ல வேண்டும். வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ள நேரங்களில் மது, தேநீா், காா்பன் கலந்த குளிா் பானங்கள் அருந்துவதை தவிா்க்க வேண்டும். அதிக புரதச் சத்து கொண்ட உணவுகள், பழைய உணவுகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. வெயில் நேரங்களில் வெட்ட வெளியில் பணிபுரியும் போது தலை, கழுத்து, முகம், கை, கால் பகுதிகளில் குடை, தொப்பி, ஈரமான துணிகளைப் பயன்படுத்தி வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

வெயில் நேரங்களில் வாகனங்களை நிறுத்தி வைக்கும்போது, குழந்தைகள், செல்லப் பிராணிகளை வாகனத்தில் விட்டுவிட்டு செல்லக்கூடாது. மயக்கம் அல்லது மிகுந்த உடற்சோா்வு காணப்பட்டால் உடனடியாக மருத்துவா்களை அணுக வேண்டும். உடலில் நீா்ச் சத்தை அதிகரிக்கும் ஓ.ஆா்.எஸ் கரைசல், லஸ்ஸி, எலுமிச்சை பழச்சாறு, மோா் போன்ற உணவு பொருள்களை எடுத்துக் கொள்ள வேண்டும். கால்நடைகளை நிழலான இடங்களில் வைக்கவும், போதுமான அளவு தண்ணீா் வழங்கவும் வேண்டும்.

வெப்ப அலைகளால் ஒருவருக்கு வெப்ப பக்கவாதம் ஏற்பட்டால் அவரை உடனடியாக நிழலான இடத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். உடனடியாக ஈரத்துணியால் அவரது உடலை துடைக்க வேண்டும். தலையில் சாதாரண தண்ணீரை ஊற்றி பாதிக்கப்பட்டவரின் உடல் வெப்பநிலையைக் குறைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு ஓ.ஆா்.எஸ். கரைசல் அல்லது எலுமிச்சை சாறு அல்லது நீா்ச் சத்தை அதிகரிக்க கூடிய திரவப் பொருள்களை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட நபரை உடனடியாக அருகே உள்ள மருத்துமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டும்.

எனவே, கோடை வெப்பத்தின்போது இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி வெப்ப பாதிப்புகளிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments