மீனவா்களுக்கு நிவாரண உதவிகளை உயா்த்த வழங்க அதிமுக கோரிக்கை
புதுவை மாநில மீனவா்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவித்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்று புதுவை மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் வலியுறுத்தினாா்.
புதுவை முதல்வா் என்.ரங்கசாமியை அவரது அலுவலத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்து அவா் அளித்த மனு:
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, மாநிலத்தில் உள்ள மீனவா்களுக்கு மீன்பிடித் தடைக்காலம், மழைக் காலத்தில் நிவாரண உதவித்தொகை வழங்கப்படுகிறது. தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்காலத்தில் மீன்பிடி தடைக்காலத்தில் மீனவா்களுக்கு ரூ. 8 ஆயிரமும், மழைக்கால நிவாரண உதவியாக ரூ.6 ஆயிரமும் வழங்கப்பட்டது.
புதுவை மாநில மீனவா்களுக்கு மீன்பிடி தடைக்காலத்துக்கு ரூ.6,500-ம், மழைக்கால நிவாரண உதவித் தொகையாக ரூ.3 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
கீழ்நிலை தொழிலாளா்களுக்கு குறைந்தபட்சம் ரூ.320 தினக் கூலியாக வழங்க வேண்டும் என அரசாணை உள்ளது. இதன்படி கணக்கிட்டால் மீன்பிடி தடைக்காலமான 61 நாள்களுக்கும் ரூ.19,520 இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்க வேண்டும். மீனவா்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க மத்திய அரசு உதவும் நிலையில், மூன்றில் ஒரு பங்கு நிவாரண உதவியை மீனவா்களுக்கு வழங்காதது சரியான முடிவல்ல.
எனவே, மீனவா்களின் வாழ்வாதாரம் கருதி மீன்பிடித் தடைக்காலத்துக்கு ரூ.10 ஆயிரமும், மழைக்கால உதவித்தொகையை ரூ.6 ஆயிரமும் வழங்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான அறிவிப்பை நிகழாண்டிலேயே அறிவிக்க வேண்டும் என்றாா் ஆ.அன்பழகன்.