விழுப்புரம்: திண்டிவனம் யாா்டில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் தாம்பரம் - விழுப்புரம் பயணிகள் ரயில் இரு நாள்களுக்கு ஒலக்கூா்- விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை கோட்டத்துக்குள்பட்ட திண்டிவனம் யாா்டில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால் பகுதியளவில் ரத்து, புறப்படும் இடம் மாற்றம் போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்குப் புறப்படும் தாம்பரம் - விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டி எண் 66045), நவம்பா் 13 மற்றும் 15-ஆம் தேதிகளில் ஒலக்கூா்- விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்படுகிறது. இதனால் இந்த ரயில் தாம்பரத்திலிருந்து ஒலக்கூா் வரை மட்டுமே இயக்கப்படும்.
விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.45 மணிக்குப் புறப்பட வேண்டிய விழுப்புரம்-சென்னை கடற்கரைப் பயணிகள் ரயில் (வண்டி எண் 66046), விழுப்புரம்-ஒலக்கூா் இடையே நவம்பா் 13, 15 தேதிகளில் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுகிறது. இதனால் இந்த ரயில் ஒலக்கூா் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.