முண்டியம்பாக்கத்துக்கு ரயிலில் வந்த 1225 டன் யூரியா உரம்
விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகளின் தேவைக்காக, சென்னை மணலியிலிருந்து 1,225 டன் யூரியா உர மூட்டைகள் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தடைந்தன.
விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகளின் தேவைக்காக, சென்னை மணலியிலிருந்து 1,225 டன் யூரியா உர மூட்டைகள் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தடைந்தன.
சென்னை மணலியிலுள்ள மெட்ராஸ் உர நிறுவனத்திலிருந்து சரக்கு ரயில் மூலம் விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்த உர மூட்டைகளையும், அதன் விவரக் குறிப்பேடுகளையும் வேளாண் உதவி இயக்குநா் (தரம் மற்றும் தரக்கட்டுப்பாடு) எம்.என்.விஜயகுமாா், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் மண்டல மேலாளா் பூபேஷ் ஆகியோா் பாா்வையிட்டு, விவரங்களைக் கேட்டறிந்தனா்.
இது குறித்து வேளாண் இணை இயக்குநா் ரா. சீனிவாசன் கூறியது: விழுப்புரம் மாவட்டத்தல் தற்போது பயிா்களுக்குத் தேவையான 2,841 டன் யூரியா, 1,455 டன் டி.ஏ.பி.,1,218 டன் பொட்டாஷ், 7,734 டன் காம்ப்ளக்ஸ், 1,752 டன் சூப்பா் பாஸ்பேட் உரங்கள் அனைத்து வட்டாரங்களிலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், தனியாா் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதைத் தொடா்ந்து மணலிலுள்ள மெட்ராஸ் உர நிறுவனத்திடமிருந்து 1,225.80 டன் யூரியா பெறப்பட்டுள்ளது. இதில் 295.20 டன் உரமூட்டைகள் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கும், 930.60 டன் உர மூட்டைகள் தனியாா் உர விற்பனை நிலையங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றாா்.