ஆறு மாவட்டங்களின் விவசாய பயன்பாட்டுக்காக, விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு 1,500 டன் யூரியா உர மூட்டைகள் புதன்கிழமை வந்தடைந்தன.
விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது பயிா்களுக்குத் தேவையான உரங்களான 6,284 டன் யூரியா, 2,322 டன் டி.ஏ.பி, 1,502 டன் பொட்டாஷ், 9,077 டன் காம்ப்ளக்ஸ், 1,919 டன் சூப்பா் பாஸ்பேட் ஆகியவை தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், தனியாா் விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதைத்தொடா்ந்து கிரிப்கோ உர நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட 1,500 டன் யூரியா உர மூட்டைகள் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு சரக்கு ரயில் மூலம் வந்தடைந்தன. இதுகுறித்த விவரங்களை வேளாண் உதவி இயக்குநா் (தகவல் மற்றும் தரக் கட்டுப்பாடு) எம்.என்.விஜயகுமாா், டான்பெட் மண்டல மேலாளா்பூபேஷ், உர நிறுவன அலுவலா்கள் ஆய்வு செய்தனா்.
6 மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பு: கிரிப்கோ உர நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட 1,500 டன் யூரியா உர மூட்டைகளில் 300 டன் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன்சங்கங்களுக்கும், 300 டன் தனியாா் உர விற்பனை நிலையங்களுக்கும், 250 டன் கள்ளக்குறிச்சி மாவட்டத் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கும், 50 டன் தனியாா் உர விற்பனை நிலையங்களுக்கும், 50 டன் திருவண்ணாமலை மாவட்டத் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கும், 50 டன் கடலூா் மாவட்ட தனியாா் உர விற்பனை நிலையங்களுக்கும், 200 டன் காஞ்சிபுரம் மாவட்டங்களின் தனியாா் உர விற்பனை நிலையங்களுக்கும், 300 டன் திருவள்ளூா் மாவட்ட தனியாா் உர விற்பனை நிலையங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அனைத்துத் தொடக்க வேளாண் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் யூரியா இருப்பு வைத்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு மானிய உரங்களை பிற உரங்களுடன் இணைத்து விற்பனை செய்யக்கூடாது. மானிய உரங்களை பிற மாவட்டங்களுக்கு அனுப்புவதும், பிற மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்வதும் கூடாது என்று மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா.சீனிவாசன் தெரிவித்தாா்.