சுயஉதவிக் குழுக்களை ஊக்குவிக்க வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்
மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரித்துள்ள பொருள்கள் தரமாக உள்ளதால் அவர்களிடம்
மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரித்துள்ள பொருள்கள் தரமாக உள்ளதால் அவர்களிடம் பொதுமக்கள் பொருள்களை வாங்கி ஊக்குவிக்க வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரரத்னூ கேட்டுக் கொண்டார்.
÷சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் பொருளாதாரத் துறை மற்றும் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்த பொருள்களின் விற்பனைக் கண்காட்சி தொடக்க விழா பல்கலைக்கழக கோகலே ஹாலில் அண்மையில் நடைபெற்றது.
÷இக்கண்காட்சியை கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரரத்னூ திறந்து வைத்து பேசியது:
Advertisement
÷மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்துள்ள இப்பொருள்கள் சிறந்த தரம் வாய்ந்து உள்ளதால் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
÷ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்கின்றனர்.
எனவே மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் இப்பொருள்களை வாங்கி அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
÷டெங்கு காய்ச்சல் நோயைத் தடுக்கும் வகையில் சுற்றுப்புற சுகாதாரத்தைப் பேணிக் காக்க கடலூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை தோறும் அனைவரும் இணைந்து 1 மணி நேரம் சுத்தம் செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
÷மாவட்டத்தில் மொத்தம் 26 லட்சம் மக்கள் உள்ளனர். இதில் குழந்தைகள், முதியோர் என 6 லட்சம் பேரைத் தவிர, மீதமுள்ள 20 லட்சம் பேர் இணைந்து வாரத்தில் 1 மணி நேரம் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டால் கடலூர் மாவட்டம் முன்மாதிரியாக திகழும்.
÷மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசுக்களைக் கட்டுப்படுத்த முடியும் என ஆட்சியர் ராஜேந்திரரத்னூ தெரிவித்தார்.
÷விழாவுக்கு, துணைவேந்தர் எம்.ராமநாதன் தலைமை வகித்தார்.
பல்கலைக்கழக வேளாண் பொருளாதாரத் துறைத் தலைவர் கே.ஆர்.சுந்தரவரதராஜன் வரவேற்றார்.
சிதம்பரம் உதவிஆட்சியர் எல்.சுப்பிரமணியன், மாவட்ட சுகாதாரத் துறை இணைஇயக்குநர் ஜவகர்லால்பாபு, இந்தியன் வங்கி மண்டல மேலாளர் இ.சுந்தரராஜன், நபார்டு வங்கி உதவிப் பொதுமேலாளர் எஸ்.ராஜகோபாலன், கடலூர் மாவட்ட மகளிர் திட்டம் திட்டஅலுவலர் எஸ்.பால்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.