திட்டக்குடி, ராமநத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் தொடர்ச்சியாக திருடு போயின. ஆடு திருடர்களைப் பிடிக்க கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் தனிப்படை அமைத்தார்.
இந்த நிலையில், தனிப்படை போலீஸாரும், ராமநத்தம் காவல் துறையினரும் இணைந்து தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, பெரம்பலூரில் இருந்து விழுப்புரம் நோக்கிச் சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டதில் 5 ஆடுகள் இருந்தன.
இதுதொடர்பாக வாகனத்தில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் ஆடு திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூரில் இருந்து ஆடுகளைத் திருடி வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து ஆடு திருட்டில் ஈடுபட்ட விழுப்புரம் மாவட்டம், சின்னகள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வேலன் (29), வி.தொட்டி கிராமத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி (23), நாகம்பேட்டையைச் சேர்ந்த பாண்டியன் (24) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
மேலும், ஆடுகளைத் திருட பயன்படுத்திய கார், ஒரு பைக், 5 ஆடுகள், ரொக்கம் 1.97 லட்சம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.