பேச்சுவார்த்தையில் உடன்பாடு: போராட்ட அறிவிப்பு வாபஸ்
பண்ருட்டியில் மக்கள் பாதுகாப்பு கவசம் அமைப்பினர் அறிவித்த சாலை மறியல் போராட்டம், அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை அடுத்து வாபஸ் பெறப்பட்டது.
பண்ருட்டியில் மக்கள் பாதுகாப்பு கவசம் அமைப்பினர் அறிவித்த சாலை மறியல் போராட்டம், அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை அடுத்து வாபஸ் பெறப்பட்டது.
பண்ருட்டி நகரப் பகுதியில் கழிவுநீர்க் கால்வாய்களை தூர்வார வேண்டும், திறந்து கிடக்கும் கால்வாய்களை சிமென்ட் பலகையைக் கொண்டு மூட வேண்டும், இந்திரா காந்தி சாலை, கும்பகோணம் சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் பாதுகாப்பு கவசம் அமைப்பு சார்பில் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக, பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் விஜய் ஆனந்த் தலைமையில் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது நகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், கும்பகோணம் சாலையில் கழிவுநீர்க் கால்வாய் பராமரிப்புப் பணிக்கு ரூ.8 லட்சம் மதிப்பில் ஒப்பந்தம் விடப்பட்டு விரைவில் பணி தொடங்கவுள்ளது. மேற்படி இடத்தில் உள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்திரா காந்தி சாலை உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் கால்வாய்கள் காலமுறையாக தூர்வாரப்பட்டு, கழிவுநீர் தேங்காமல் இருக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனால், சாலை மறியல் போராட்ட அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது. பேச்சுவார்த்தையில், நகராட்சி பொறியாளர் வெங்கடாஜலம், உதவிப் பொறியாளர் சிவசங்கரன், மக்கள் பாதுகாப்பு கவசம் அமைப்பின் மாவட்ட அமைப்புக்குழு எம்.வெங்கடேசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.தஷ்ணாமூர்த்தி, மாவட்ட அமைப்புக்குழு வி.சேதுராஜன், கே.ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.