முகப்பு
கடலூர்

காதலன் மீது புகார் அளித்த பட்டதாரி பெண் தற்கொலை

சிதம்பரம் மகளிர் காவல் நிலையத்தில், திருமணம் செய்வதாகக் கூறி காதலன் ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்த பட்டதாரி பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:35 PM
பகிர்:

சிதம்பரம் மகளிர் காவல் நிலையத்தில், திருமணம் செய்வதாகக் கூறி காதலன் ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்த பட்டதாரி பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சிதம்பரம் 1-வது வார்டு சகஜானந்தா தெருவைச் சேர்ந்த ஜெயராஜ் மகள் ஜெயதேவி (30). எம்எஸ்சி வேளாண் பட்டதாரியான இவர் புறவழிச் சாலையில் உள்ள வேளாண் அலுவலகத்தில் தாற்காலிக அலுவலராக பணியாற்றி வந்தார்.

ஜெயதேவி வீட்டின் அருகாமையில் வசிக்கும் பிஇ பட்டதாரியான கருணாநிதி (34) என்பவர் சென்னை தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, கருணாநிதி ஜெயதேவியுடன் நெருங்கிப் பழகியதாகத் தெரிகிறது. இதனால், ஜெயதேவி கர்ப்பமடைந்தார்.

இதற்கிடையே, ஜெயதேவி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கருணாநிதியிடம் கேட்டுள்ளார்.

அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால், ஜெயதேவி சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 21-ம் தேதி புகார் அளித்தார். இந்த நிலையில், ஜெயதேவி செவ்வாய்க்கிழமை வீட்டில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
 அங்கு ஜெயதேவி இறந்தார்.

இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து கருணாநிதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். மேலும், போலீஸார் ஜெயதேவியின் உடலை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
 
 

முழு கட்டுரையைப் படிக்க →