காவிரி உரிமை மீட்புப் பொதுக்கூட்ட ஏற்பாடு: திமுக, தோழமைக் கட்சியினர் ஆலோசனை
காவிரி உரிமை மீட்புப் பயண பொதுக்கூட்டம் தொடர்பாக கடலூரில் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சியினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
காவிரி உரிமை மீட்புப் பயண பொதுக்கூட்டம் தொடர்பாக கடலூரில் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சியினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பில் டெல்டா மாவட்டங்களில் காவிரி உரிமை மீட்புப் பயணம் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 7-ஆம் தேதி திருச்சி முக்கொம்பிலிருந்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கிய காவிரி மீட்புப் பயணமும், அரியலூரிலிருந்து 9-ஆம் தேதி புறப்பட்ட தலைவர்களின் மீட்புப் பயணமும் 12-ஆம் தேதி சிதம்பரத்தில் ஒன்றிணைகின்றன. இதையடுத்து, கடலூரில் அன்று (வியாழக்கிழமை) மாலையில் காவிரி உரிமை மீட்புப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்தப் பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவது தொடர்பாக, திமுக கடலூர் கிழக்கு மாவட்டச் செயலர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் கடலூரில் தோழமைக் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திமுக மாநில தேர்தல் பணிக்குழுச் செயலர் இள.புகழேந்தி, புவனகிரி தொகுதி எம்எல்ஏ துரை.கி.சரவணன், தி.க. பொதுச் செயலர் துரை.சந்திரசேகரன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஆர்.ராதாகிருஷ்ணன், அகில இந்திய கமிட்டி உறுப்பினர் ஏ.எஸ்.சந்திரசேகரன், மாவட்டச் செயலர்கள் டி.ஆறுமுகம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) , ஜெ.ராமலிங்கம் (மதிமுக), சா.முல்லைவேந்தன், பால.அறவாழி (விடுதலைச் சிறுத்தைகள்), இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினர் டி.மணிவாசகம், மாவட்டத் தலைவர்கள் சாதிக்தாவூத் (ம.ம.க), ராஜா ரஹிமுல்லா (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், வருகிற 12-ஆம் தேதி காலை 8 மணிக்கு மாவட்ட எல்லையான வல்லம்படுகையில் காவிரி உரிமை மீட்புப் பயணக் குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு அளித்து பயணத்தில் பங்கேற்பது.
மாலை 5 மணிக்கு கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பொதுமக்கள், விவசாயிகளை பெருந்திரளாகப் பங்கேற்க வைப்பது. 12-ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கருப்புச் சட்டை, கருப்பு சின்னம் அணிவது, வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றுவது ஆகிய தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.