2 இளைஞர்கள் கொலை வழக்கில் தந்தை, மகன் சரண்
புவனகிரி அருகே இளைஞர்கள் இருவர் கொல்லப்பட்ட வழக்கில் தந்தையும், மகனும் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை சரணடைந்தனர்.
புவனகிரி அருகே இளைஞர்கள் இருவர் கொல்லப்பட்ட வழக்கில் தந்தையும், மகனும் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை சரணடைந்தனர்.
கடலூர் மாவட்டம், புவனகிரி கோட்டைமேட்டுத் தெருவில் வசித்து வந்த கணேசன் மகன் குருசேவ் (29). இவர் தனது உறவினரான நாகை மாவட்டம், சீர்காழியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் அபினாஷ் (20) என்பவருடன், தனது சொந்த ஊரான புவனகிரி அருகே உள்ள சாத்தப்பாடி கிராமத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றார்.
அங்கு குருசேவ் தனது சித்தப்பா விஜயனுடன் (58) சொத்துப் பிரச்னை தொடர்பாக பேசியபோது, இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த விஜயன், அவரது மகன் கோபி (24) ஆகிய இருவரும் சேர்ந்து அரிவாள், இரும்புக் கம்பியால் குருசேவை தாக்கினர். இதை தடுக்க முயன்ற அபினாஷும் தாக்கப்பட்டார். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து புவனகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில், வழக்கில் தொடர்புடைய விஜயன், கோபி ஆகிய இருவரும் புவனகிரி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை காலை சரணடைந்தனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.