தொழிலாளர் நல வாரியத்துக்கு நிதி ஒதுக்கக் கோரி சிஐடியூ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தொழிலாளர் நலவாரியத்துக்கு நிதி ஒதுக்கக் கோரி கடலூரில் சிஐடியூ தொழில்சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிலாளர் நலவாரியத்துக்கு நிதி ஒதுக்கக் கோரி கடலூரில் சிஐடியூ தொழில்சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நல வாரியத்தில் பதிவு செய்துள்ள அமைப்பு சாரா மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு எங்கு விபத்து நடந்தாலும் அவர்களின் மரணத்துக்கு ரூ.5 லட்சமும், இயற்கை மரணத்துக்கு ரூ.1 லட்சமும் வழங்கிட வேண்டும். கருவுற்றவர்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு நிதி ரூ.18 ஆயிரத்தை பல்வேறு தவணைகளாகப் பிரித்து வழங்காமல் ஒரே தவணையாக வழங்க வேண்டும்.
குழந்தைகளுக்கு 1-ஆம் வகுப்பு முதல் கல்வி உதவித் தொகை வழங்கிட வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதிலிருந்தே ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
நலவாரிய அட்டையில் உள்ள வயதையே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். ரூ.500 கோடி நிதி ஒதுக்கி தேங்கி கிடக்கும் மனுக்களுக்கு பணப் பலன்களை உடனடியாக வழங்கிட வேண்டும். ஆட்சியர் தலைமையிலான கண்காணிப்புக் குழுகூட்ட முடிவுகளை அமலாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூர் தலைமை தபால் நிலையம் முன் சிஐடியூ தொழில்சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவர் ஆர்.ஆளவந்தார் தலைமை வகித்தார். மாநில உதவி பொதுச் செயலர் வி.குமார், மாவட்டச் செயலர் பி.கருப்பையன், மாநிலக்குழு உறுப்பினர் வி.கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர் கே.சாவித்திரி, இணைச் செயலர்கள் ஏ.பாபு, வி.திருமுருகன், வி.சுப்புராயன், எஸ்,தட்சணாமூர்த்தி உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்கள்.