வடலூர் வாரச் சந்தையில் சுகாதாரச் சீர்கேடு!
வடலூர் வாரச் சந்தைப் பகுதியில் மழை நீர் தேங்கி சுகாதாரச் சீர்கேடு நிலவுகிறது.
வடலூர் வாரச் சந்தைப் பகுதியில் மழை நீர் தேங்கி சுகாதாரச் சீர்கேடு நிலவுகிறது.
வடலூரில் பேருந்து நிலையம் எதிரே செல்லியம்மன் கோயிலுக்குச் சொந்தமான சுமார் 2.5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை பேரூராட்சி நிர்வாகம் குத்தகைக்கு எடுத்து, வாரச் சந்தை நடத்தி வருகிறது. வாரந்தோறும் சனிக்கிழமை சந்தை நடைபெறும்.
வடலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள நெத்தனாங்குப்பம், ஓணாங்குப்பம், ராசாக்குப்பம், ஆண்டிக்குப்பம், சேராக்குப்பம், ஆபத்தாரணபுரம், பார்வதிபுரம், வீணங்கேணி, தென்குத்து, வடக்குத்து, இந்திரா நகர், வடக்கு மேலூர், மருவாய், மேட்டுக்குப்பம், கருங்குழி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வாரச் சந்தைக்கு வந்து பொருள்களை வாங்கிச் செல்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் வாரச் சந்தை பகுதியை பேரூராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை என்று வியாபாரிகள், பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: மழைக் காலத்தில் வடலூர் வாரச் சந்தை நடைபாதை சேறும், சகதியுமாகக் காணப்படுகிறது. இதில் பொதுமக்கள் வழுக்கி விழும் அபாயம் உள்ளது. சந்தையின் அருகே மழைநீர், கழிவுநீருடன் கலந்து தேங்கி நிற்கிறது. இதனால் அந்தப் பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், சந்தையில் வணிகம் செய்யும் வியாபாரிகளுக்கு குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, வாரச் சந்தையில் தண்ணீர் தேங்குவதை தடுக்க வேண்டும். சுகாதார நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.