நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படுமா?
குறிஞ்சிப்பாடி ஒன்றியம், ரெட்டிப்பாளையத்தில் ரூ. 10 லட்சத்தில் கட்டப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த 3 ஆண்டுகளாகியும் திறக்கப்படாததால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிஞ்சிப்பாடி ஒன்றியம், ரெட்டிப்பாளையத்தில் ரூ. 10 லட்சத்தில் கட்டப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த 3 ஆண்டுகளாகியும் திறக்கப்படாததால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட குறிஞ்சிப்பாடி வடக்கு - தெற்கு, கண்ணாடி, ஆடூர்குப்பம், ஆடூர் அகரம், கொத்தவாச்சேரி, குண்டியமல்லூர், கீழ்பூவாணிக்குப்பம், மேல்பூவாணிக்குப்பம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 17 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
இந்தப் பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் நெல்லை கொள்முதல் செய்ய, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்பேரில், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், ரெட்டிப்பாளையம் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் ரூ. 10 லட்சம் செலவில் நெரடி கொள்முதல் நிலையம் கட்டப்பட்டது.
இந்தக் கொள்முதல் நிலையம் கட்டி முடிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் இதுநாள் வரையில் திறக்கப்படவில்லை.
தற்போது குறிஞ்சிப்பாடி வட்டாரப் பகுதியில் சம்பா பருவ நெல் அறுவடை நடைபெற்று வருகிறது.
நேரடி நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இடைத் தரகர்களின் ஆதிக்கத்தால் நியாயமான விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
இதுகுறித்து குறிஞ்சிப்பாடி உழவர் மன்றத் தலைவர் ஆர்.கே.ராமலிங்கம் கூறியதாவது:
குறிஞ்சிப்பாடி வட்டம், வரதராஜன்பேட்டையில் தாற்காலிக நேரடி நெல் கொள்முதல் லையம் இயங்கி வந்தது. நிரந்தரக் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என உழவர் மன்றம் மூலம் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன்படி, ரெட்டிப்பாளையம் கிராமத்தில் ரூ. 10 லட்சத்தில் உளர் களத்துடன் கூடிய நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால், இதுநாள் வரையில் திறக்கப்படவில்லை.
இதனால், நெல் விவசாயிகள் தங்களின் நெல்லை இடைத் தரகர்கள், தனியார் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்குக் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக விவசாயிகளின் நலன் கருதி, கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என்றார் அவர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) எம்.டி.கிருபாகரனிடம் செல்லிடப்பேசி மூலம் தொடர்புக் கொண்டு கேட்டபோது, இதுகுறித்து விசாரித்துத் தெரிவிப்பதாகக் கூறினார்.