குறிஞ்சிப்பாடி அருகே முன்விரோதம் காரணமாக, விவசாயி தாக்கப்பட்டது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் 2 வீடுகள் சூறையாடப்பட்டன. இதுகுறித்த புகாரின் பேரில் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
குறிஞ்சிப்பாடி வட்டம், மண்டபமேட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரங்கசாமி(68), லட்சுமணன்(54). கடத்தல் வழக்கு தொடர்பாக இவர்களுக்கு இடையே முன்விரோதம் உள்ளது.
திங்கள்கிழமை மாடு மேய்க்கச் சென்ற ரங்கசாமியை, லட்சுமணனின் மகன்கள் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளனர்.
பலத்த காயமடைந்த ரங்கசாமி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால், ஆத்திரமடைந்த ரங்கசாமியின் உறவினர்கள், சசிதரனுக்குச் சொந்தமான வீட்டையும், அதில் இருந்த பொருள்களையும் அடித்து நொறுக்கினர்.
இந்த நிலையில், ரங்கசாமியின் உறவினரான கலாதேவியிடம், சசிதரனின் ஆதரவாளர்கள் தகராறு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக ஏழுமலை (ரங்கசாமி தரப்பு), சசிதரன், கலாதேவி ஆகியோர் அளித்த பரஸ்பர புகாரின் பேரில், குறிஞ்சிப்பாடி போலீஸார் 22 பேர் மீது வழக்குப் பதிந்து, சசிதரன்(23), மாயவேல் (58), ராஜேந்திரன்(40), அருள்மொழி(30), சட்டநாதன்(34), ராஜசேகர்(42), ஹரிதாஸ் (34), சேதுபதி (34), தேவமுருகன் (39), சங்கர் (34), லட்சுமணன் (54) ஆகிய 11 பேரை கைது செய்தனர்.
மேலும், தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.