முகப்பு
கடலூர்

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு பணி வழங்காமல் அலைக்கழிப்பு: ஏஐடியூசி

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் முதல் அனல்மின் நிலையத்தில் பணிபுரிந்துவரும், பொது பணிமூப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வேலை வழங்காமல் அலைக்கழிக்கப்படுவதாக

Updated On : 15 மே, 2018 at 4:35 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் முதல் அனல்மின் நிலையத்தில் பணிபுரிந்துவரும், பொது பணிமூப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வேலை வழங்காமல் அலைக்கழிக்கப்படுவதாக என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் (ஏஐடியுசி) புகார் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தச் சங்கத்தின் பொதுச் செயலர் கே.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கை: என்எல்சி இந்தியா நிறுவனத்தின் முதல் அனல்மின் நிலையத்தில் 1999-ஆம் ஆண்டு முதல் ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணிபுரிந்து, 2010-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி என்எல்சி நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட பொது பணிமூப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒப்பந்தத் தொழிலாளர்கள் 30.4.2018-இல் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
அவர்கள் மீண்டும் 1.5.2018 முதல் பணியமர்த்தம் செய்யப்பட்டனர்.
அன்று முதல் குறைந்தபட்ச ஊதியம் மட்டுமே வழங்கப்படுமென்றும், இதற்கான கடிதத்தில் தொழிலாளர்கள் கையெழுத்திட்டுக் கொடுத்தால்தான் வேலை வழங்கப்படுமென்றும், என்எல்சி நிர்வாகத்தின் தூண்டுதலின் பேரில் ஒப்பந்ததாரர்கள் கடந்த 10 நாள்களாக வேலை வழங்காமல் அலைக்கழித்து வருவது கண்டனத்துக்குரியது.
என்எல்சி நிர்வாகத்தின் இத்தகைய நடவடிக்கை, ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணி மூப்புப் பட்டியலை ரத்து செய்து, அவர்களின் பணி நிரந்தரத்தை சீர்குலைப்பது, இபிஎப் உள்ளிட்ட சட்ட ரீதியிலான உரிமைகளைப் பறிப்பதாகும்.
ஒப்பந்தத் தொழிலாளர்களை மீண்டும் கொத்தடிமையாக்கும் நடவடிக்கையாகும். இதை ஏஐடியூசி ஒரு போதும் ஏற்காது.
எனவே, என்எல்சி நிர்வாகம் மேற்கண்ட ஒப்பந்ததாரர்களின் கடிதத்தை திருப்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவறும்பட்சத்தில் இதனால் ஏற்படும் தொழில் சச்சரவுகளுக்கு என்எல்சி நிர்வாகமே பொறுப்பேற்க நேரிடும் என அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.