முகப்பு
கடலூர்

நீட் தேர்வு தோல்வி பயம்: மாணவர் தற்கொலை

நீட் தேர்வு தோல்வி பயத்தால் கடலூரில் மாணவர் ஒருவர் திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

Updated On : 22 மே, 2018 at 12:55 AM
பகிர்:

நீட் தேர்வு தோல்வி பயத்தால் கடலூரில் மாணவர் ஒருவர் திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர் அருகே உள்ள உண்ணாமலை செட்டிச்சாவடி பகுதியைச் சேர்ந்த பாபு, வசந்தி தம்பதியின் மகன் அருண்பிரசாத் (19). 2016-17 -ஆம் ஆண்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து பிளஸ் 2 தேர்வு எழுதினார். அதில், 1,150 மதிப்பெண்கள் பெற்ற நிலையில், மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை எழுதியுள்ளார். ஆனால், அந்தத் தேர்வில் அவர் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சென்னையிலுள்ள தனியார் மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தார்.
இந்த நிலையில், மே மாதம் 6 -ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை மீண்டும் எழுதிய நிலையில், வலைத்தளங்களில் வெளியான மாதிரி விடைத்தாளை திங்கள்கிழமை பார்வையிட்டுள்ளார். இதில், தான் எழுதிய தேர்வுக்கும், மாதிரி விடைத்தாளில் இருந்த விடைகளுக்கும் அதிக வித்தியாசம் இருப்பதாகவும், எனவே, இந்த முறையும் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பு குறைவு எனக் கருதி அருண்பிரசாத் மனவருத்தத்தில் இருந்தாராம். இதுகுறித்து தனது தாத்தாவிடம் அவர் தொலைபேசியில் பேசியுள்ளார்.
இந்த நிலையில், பாபு, வசந்தி ஆகியோர் திங்கள்கிழமை வேலைக்குச் சென்றனர். மதிய உணவுக்காக வசந்தி வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு திறந்த நிலையில் இருந்தது. மாடிக்குச் சென்று பார்த்தபோது அங்கு அருண்பிரசாத் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினார்.
இந்தச் சம்பவம் குறித்து நெல்லிக்குப்பம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.