விருத்தாசலத்தைச் சேர்ந்த பெண் காய்ச்சலால் உயிரிழந்தார். இவர் பன்றிக் காய்ச்சலால் இறந்ததாகக் கூறப்படுகிறது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் எம்.ஆர்.கே. நகரைச் சேர்ந்த முத்துசாமி மனைவி ராணி (47). இவருக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது.
இதையடுத்து திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த அவர், பின்னர் பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். காய்ச்சல் குணமாகாத நிலையில் திருச்சி அரசு பொது மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவப் பரிசோதனை செய்ததில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது தெரியவந்ததாம்.
அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், வியாழக்கிழமை உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது சடலம் பலத்தப் பாதுகாப்புடன் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு, சில மணிகளில் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து சுகாதாரத் துறையினரிடம் கேட்டபோது, ராணி இறப்பு குறித்த மருத்துவ அறிக்கை கிடைக்கப்பெறவில்லை எனவும், அதன்பிறகே விளக்கம் அளிக்க முடியுமெனவும் தெரிவித்தனர்.