முகப்பு
கடலூர்

புதிய மாவட்ட கோரிக்கை: விருத்தாசலத்தில் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 23 ஜனவரி 2019, 8:44 am IST
பகிர்:

விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூரிலிருந்து சுமார் 65 கி.மீ. தொலைவில் விருத்தாசலம் நகரம் அமைந்துள்ளது. இதேபோல, வேப்பூர், திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில் வட்டங்கள் மாவட்டத் தலைநகருக்கு வெகுதொலைவில் அமைந்துள்ளதால் அந்தப் பகுதி மக்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட இதர அரசு தலைமை அலுவலகங்களுக்குச் சென்று வருவதில் காலம், பண விரயம் ஏற்பட்டு வருகிறது. எனவே, மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் நெடுங்காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், விருத்தாசலம் மாவட்டக் கோரிக்கை தற்போது வலுப்பெற்றுள்ளது. இதையடுத்து, விருத்தாசலம் விழிப்புணர்வு இயக்கம் அண்மையில் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தினர் புதிய மாவட்ட கோரிக்கையை வலியுறுத்தி விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இயக்கத் தலைவர் தனவேல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்கப் பிரதிநிதி கர்மாங்குடி எஸ்.வெங்கடேசன், சாத்துக்கூடல் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
ஆர்ப்பாட்டத்தில் சமூக ஆர்வலர்கள், விவசாய சங்கத்தினர், அனைத்துக் கட்சியினர் உள்பட  நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு விருத்தாசலம் மாவட்டம் அமைக்கக் கோரியும், விருத்தாசலம் கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளை பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்கக் கூடாது என வலியுறுத்தியும் முழுக்கங்களை எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.