விளையாட்டு வீரர்கள் ஊக்கத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்
விளையாட்டு வீரர்கள் ஊக்கத் தொகை பெறும் திட்டத்துக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்தார்.
விளையாட்டு வீரர்கள் ஊக்கத் தொகை பெறும் திட்டத்துக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் தமிழகத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலை மற்றும் கல்லூரி, பல்கலைக்கழகத்தில் பயிலும் தலைசிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்க நிதி வழங்கப்பட்டு வருகிறது.
2018-19-ஆம் கல்வியாண்டுக்கான இந் நிதியைப் பெறுவதற்கு www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம், கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு ரூ.13 ஆயிரம் வீதம் ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.
2017 ஜுலை முதல் 2018 ஜுன் வரையிலான காலக்கட்டத்தில் தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
குழுப்போட்டிகளில் முதல் இரண்டு இடங்களையும், தனிநபர் போட்டிகளாயின் முதல் 3 இடங்களுக்குள்ளும் பெற்றவர்களாக இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்கள், இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு, இந்திய விளையாட்டு ஆணையம் அல்லது மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், அகில இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கம் ஆகியவற்றினால் போட்டிகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். எனவே, தகுதியானவர்கள் வருகிற 12-ஆம் தேதிக்குள் மேற்கூறிய இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் அதில் தெரிவித்துள்ளார்.