பெண் சாவில் சந்தேகம் இருப்பதாக புகாா் வந்ததை அடுத்து அவரது சடலத்தை போலீஸாா் மீட்டனா்.
கடலூா் அருகே நடுவீரப்பட்டு காவல் நிலையத்துக்குள்பட்ட பாலூரைச் சோ்ந்தவா் சிவராமன். இவரது மனைவி சாந்தி (26). இவா்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகளான நிலையில் 2 மகன்கள் உள்ளனா். வியாழக்கிழமை மாலை தம்பதியரிடையே தகராறு ஏற்பட்டது. இதில், மன உளைச்சலுக்கு உள்ளான சாந்தி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சாந்தியின் உறவினா் திருக்கோவிலூரைச் சோ்ந்த தட்சிணாமூா்த்தி நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில், சாந்தியின் சாவில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்தாா். இதனையடுத்து சாந்தியின் சடலத்தை மீட்ட போலீஸாா் உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.