கடலூர்

பருவமழை முன்னேற்பாடு: வாய்க்கால் கரைகளை பலப்படுத்த ரூ.2.02 கோடி ஒதுக்கீடு

DIN

பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகளாக, கடலூர் மாவட்டத்தில் வாய்க்கால்களைத் தூர்வாரி கரைகளை பலப்படுத்த ரூ.2.02 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.
கடலூர்  மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கும். பல்வேறு மாவட்டங்களின் வடிகாலாக கடலூர் விளங்குவதால், மழைக் காலத்தில் அதிகப்படியான நீர் ஆறு மற்றும் நீர்நிலைகளில் செல்லும்.  எனவே, நீர்நிலைகளை தூர்வாரி தண்ணீர் விரைவாகச் செல்லும் வகையில் முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. 
இதற்காக, 28 கி.மீ. தொலைவுக்கு வாய்க்கால், வடிகால் வாய்க்கால்களை தூர்வாரி அதன் கரைகளை பலப்படுத்த ரூ.2.02 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
பணிகளை விரைவாகத் தொடங்கும் வகையில், கடலூர் பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. சிதம்பரம், புவனகிரி, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், கடலூர், பண்ருட்டி வட்டங்களில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 
இதில், முதல் சிப்பமாக ஓமகுளம் முதல் கான்சாகிப் வாய்க்கால் வரை தூர்வாரி கரைகளை பலப்படுத்துதல்,  உப்பனாறு வடிகால், எம்ஜிஆர் வாய்க்கால், குமாரமங்கலம் வடிகால் ஆகியவற்றில் உள்ள செடி, கொடிகள், மண்திட்டுகள், தடைகள் அகற்றுதல் போன்ற பணிகள் ரூ.80 லட்சத்தில் மேற்கொள்ளப்படுகிறது.
இரண்டாவது சிப்பமாக, காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் நெய்வாசல், ராதா கிளை வாய்க்கால், வடிகால், தென்ரெட்டை, குன்னன் கிளை வாய்க்கால், திருச்சின்னபுரம் வாய்க்கால், புதிய மற்றும் பழைய ஈச்சம்பூண்டி, கண்டமங்கலம், மேலக்கடம்பூர், கீழகடம்பூர், செட்டித்தாங்கல், சார்வராஜன்பேட்டை வடிகால் ஆகியவற்றை பலப்படுத்தும் பணி ரூ.75 லட்சத்தில் மேற்கொள்ளப்படுகிறது.
மூன்றாவது சிப்பமாக, ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தில் டி.நெடுஞ்சேரி, பாண்டியன் வடிகால்கள், கடலூர் வட்டத்தில் கெடிலம் ஆறு, கொண்டாங்கி ஏரி, சின்ன வாய்க்கால், வண்டிபாளையம் வாய்க்கால், புலிகுத்தி ஓடை கிளை வாய்க்கால், பெண்ணையாறு, தோட்டப்பட்டு ஏரி வரத்து மற்றும் வடிகால், பண்ருட்டி வட்டத்தில் வெள்ளப்பாக்கம் பிரதான வாய்க்கால், சிறுகிராமம் ஏரி, வீரபெருமாள் நல்லூர் ஏரி, கண்டரக்கோட்டை ஏரி, புலவனூர் ஏரி, எல்.என்.புரம் ஏரி, பூங்குணம் ஏரி, சேமக்கோட்டை ஏரி, நத்தம் ஏரி, குறிஞ்சிப்பாடி வட்டத்தில் மருவாய் மன்னேரி, டி.பாளையம் பெரிய ஏரி, விருப்பாச்சி கணக்கன் ஏரி ஆகியவற்றின் வாய்க்கால்கள் ஆறுகளில் உள்ள தடுப்புகள், மண்திட்டுகள், செடி, கொடிகளை அகற்றும் பணி ரூ.47 லட்சத்தில் மேற்கொள்ளப்படுகிறது. பணிகள் அக்டோபரில் தொடங்கும் என்று பொதுப் பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வால் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

SCROLL FOR NEXT