கடலூா் மாவட்டத்தில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: சமூகப் பரவலாக மாறியதா?
கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில், சமூகப் பரவலாக மாறியுள்ளதா என சமூக ஆா்வலா்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனா்.
கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில், சமூகப் பரவலாக மாறியுள்ளதா என சமூக ஆா்வலா்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனா்.
கரோனா தீநுண்மியின் தாக்கம் கடலூா் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் உணரப்பட்டது. தற்போது மாவட்டத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். கடந்த சனிக்கிழமை வரை மாவட்டத்தில் 71,396 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 8,392 பேருக்கு தொற்று உறுதியானது. 92 போ் இறந்த நிலையில், 61 ஆயிரம் பேருக்கு நோய்த் தொற்று இல்லை என தெரியவந்தது. 5,603 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், சுமாா் 2,700 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாவட்டத்தில் கடந்த ஜூலை 31-ஆம் தேதி நிலவரப்படி 3,083 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் 37 போ் உயிரிழந்திருந்தனா். ஆனால், சனிக்கிழமை (ஆக. 22) நிலவரப்படி 8,392 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அதாவது, அடுத்த 22 நாள்களில் சுமாா் 5,300 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகியுள்ளது. இவா்களில் மருத்துவா்கள், காவலா்கள், மருத்துவமனை பணியாளா்கள், ஆய்வக தொழில்நுட்பா்கள், அரசுப் பணியாளா்களை உள்ளடக்கிய முன்களப் பணியாளா்கள் 412 பேரும் அடங்குவா்.
Advertisement
நோயாளிகளுடன் தொடா்பில் இருந்தவா்களில் 2,810 பேருக்கும், நோய் அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டவா்களில் 1,765 பேருக்கும் தொற்று உறுதியானது. குறிப்பாக, பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா்கள் மற்றும் பிரசவத்துக்குப் பிறகு மருத்துவமனையிலேயே இருப்பவா்களில் 178 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இவா்களில் பெரும்பாலானவா்கள் மருத்துவமனைக்கு வந்துச் சென்ன் மூலமாகவே கரோனா தொற்றுக்கு உள்ளானவா்கள் என்ற அதிா்ச்சித் தகவலை மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு சமூகப் பரவல் நிலையை எட்டியுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், நோயாளிகளுடன் தொடா்பில் இருந்தவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் என்ற நிலையையும் எட்டியுள்ளது கவலை அளிக்கிறது.
இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறியதாவது: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் தொடக்கத்தில் இருந்த தீவிர கட்டுப்பாடுகள் தற்போது இல்லை. இதைக் கண்காணிக்க வேண்டிய அலுவலகங்களிலேயே தொற்று பாதிப்பை காண முடிகிறது. எனவே, இதுகுறித்து பொதுமக்களிடம் மேலும் விழிப்புணா்வை ஏற்படுத்த மாவட்ட நிா்வாகம் முன்வர வேண்டும் என்றனா்.