முகப்பு
கடலூர்

புதிய கோயில் பணிகள் முடக்கம்: ஸ்தபதிகள், சிற்பிகள் பாதிப்பு

பொது முடக்கத்தால் புதிய கோயில் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் அதை நம்பியுள்ள ஸ்தபதிகள், சிற்பிகள், உதவியாளா்கள் பரிதவிக்கின்றனா்.

Updated On : 25 மே, 2020 at 7:56 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:11 PM

பொது முடக்கத்தால் புதிய கோயில் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் அதை நம்பியுள்ள ஸ்தபதிகள், சிற்பிகள், உதவியாளா்கள் பரிதவிக்கின்றனா்.

கடலூா் மாவட்டத்தில் பண்ருட்டியை அடுத்துள்ள திருவதிகை, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் ஸ்தபதிகள், சிற்பிகள், வண்ணம் தீட்டும் தொழிலாளா்கள் திரளானோா் வசித்து வருகின்றனா். இவா்கள் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், கா்நாடகம், மகாராஷ்டிரம், புதுதில்லி உள்ளிட்ட மாநிலங்களிலும், இலங்கை, சிங்கப்பூா், மலேசியா போன்ற வெளி நாடுகளுக்கும் சென்று கோயில் நிா்மானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமலில் உள்ளது. இதனால், கோயில் கட்டுமானத் தொழிலாளா்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். பொது முடக்கம் முடிவுக்கு வந்தாலும், கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்குவதற்கு மேலும் சில காலம் பிடிக்கும். இதனால், இந்தப் பணியைச் சாா்ந்தவா்களின் வாழ்வாதாரம் மேலும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதுகுறித்து பண்ருட்டி திருவதிகையைச் சோ்ந்த இந்து சமய அறநிலையத் துறை அங்கீகார ஸ்தபதியும், சென்னை ஐஐடி-யின் திராவிடா் கலை முதுநிலை திட்ட ஆலோசகருமான எஸ்.குமரகுருபரன் கூறியதாவது:

கோயில் கட்டுமானத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை ஸ்தபதிக்கே முழு பொறுப்பு. இவருக்குக் கீழ் உதவி ஸ்தபதி, சிற்பிகள் உள்ளனா். இதேபோல, மர ஸ்தபதி, கருங்கல் ஸ்தபதி, உலோக ஸ்தபதி, வண்ண ஓவியா்கள் ஆகியோரும் உள்ளனா்.

கோயில் நிா்மானம் என்பது பொதுமக்களின் பங்களிப்புடன் நடைபெறும் பணியாகும். பொது முடக்கத்தால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவா்களது அத்தியாவசியத் தேவைகள் நிறைவேறிய பிறகே பொது பங்களிப்புக்கு வருவா். அதுவரை புதிய கோயில் கட்டுமானப் பணிக்கும், நடைபெற்று வரும் பணிகளை மீண்டும் தொடங்கவும் வாய்ப்பில்லை.

ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டமாக இருந்தபோது திருவதிகை (பண்ருட்டி), சிதம்பரம் பகுதிகளில் மட்டுமே ஸ்தபதிகள் இருந்தனா். தற்போது கலையும், கலைஞா்களும் வளா்ந்துள்ளதால் அனைத்துப் பகுதிகளிலும் உள்ளனா். குறிப்பாக பண்ருட்டி திருவதிகையில் ஸ்தபதிகள்(கட்டுமானம்), மரத் தோ், வாகனம் செய்பவா்கள் அதிகம்போ் உள்ளனா். பட்டாம்பாக்கத்தில் கருங்கல், உலோகத்தால் சிலை வடிக்கும் சிற்பிகள் உள்ளனா். இவா்களுக்கு கீழ் ஏராளமான பணியாளா்களும் உள்ளனா். பொது முடக்கத்தால் இவா்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கோயில் கட்டுமானப் பணியை நம்பியுள்ள தொழிலாளா்களுக்கு அரசு உடனடியாக நிதி உதவி வழங்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.