சிதம்பரம் அருகே மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை
சிதம்பரம் அருகே மனைவியை கொலை செய்துவிட்டு கணவரும் தற்கொலை செய்துகொண்டார்.
சிதம்பரம் அருகே மனைவியை கொலை செய்துவிட்டு கணவரும் தற்கொலை செய்துகொண்டார்.
சிதம்பரம் அருகே உள்ள ஆயிப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல்(55). இவரது மனைவி செல்வராணி (46). தங்கவேல் சற்று உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் மனைவியுடன் அடிக்கடி சண்டை போட்டுள்ளார். மேலும் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டும் அவரிடம் அடிக்கடி தகராறு செய்வதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை செல்வராணியும், தங்கவேலும் வீட்டில் இறந்து கிடந்துள்ளனர்.
இதுபற்றி அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஒரத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரனை நடத்தினர். அப்போது தங்கவேலின் மனைவி செல்வராணி கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அருகிலேயே அவரது கணவர் தங்கவேலும் விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தார். இருவரின் உடல்களையும் கைப்பற்றிய ஒரத்தூர் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில், கணவன் மனைவிக்கு இடையே வழக்கம்போல் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த தங்கவேலு, மனைவி செல்வராணியை சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை செய்ததும், அவர் இறந்து விட்டதால் பயத்தில் தங்கவேல் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. இருப்பினும் கொலை மற்றும் தற்கொலைக்கான காரணங்கள் குறித்து ஒரத்தூர் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.