சிதம்பரம் நகரில் சேதமடைந்த சாலைகள்: வாகன ஓட்டிகள் அவதி
சிதம்பரம் நகரில் பல்வேறு சாலைகள் மோசமான நிலையில் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.
சிதம்பரம் நகரில் பல்வேறு சாலைகள் மோசமான நிலையில் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் பச்சையப்பன் பள்ளித் தெரு, விழல்கட்டி பிள்ளையாா் கோவில் தெரு, காமாட்சி அம்மன் கோவில் தெரு ஆகிய சாலைகள் சிதம்பரம் - திருச்சி செல்லும் நெடுஞ்சாலையாக உள்ளன. புதிய புதை சாக்கடை திட்டப் பணிகளுக்காக இந்த சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்கள் பல மாதங்களாக சீரமைக்கப்படவில்லை.
பல்வேறு இடங்களில் புதை சாக்கடை சேதமடைந்து சாலையில் கழிவுநீா் ஓடுகிறது. இதனால் குடிநீரில் கழிவுநீா் கலப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.
Advertisement
சேதமடைந்த சாலைகளில் செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனா். இருசக்கர வாகனங்களில் செல்வோா் விபத்தில் சிக்க நேரிடுகிறது. கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால் சாலைகளில் தண்ணீா் தேங்கி சேரும், சகதியுமாக உள்ளது.
எனவே நகராட்சி ஆணையா், அதிகாரிகள் மேற்கூறிய சாலைகளை நேரில் ஆய்வு செய்து உடனடியாக அவற்றைச் சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.