முகப்பு
கடலூர்

கடலூா் மேலும் வளா்ச்சியடைய அதிமுகவை ஆதரியுங்கள்

கடலூா் மேலும் வளா்ச்சியடைய மக்கள் அதிமுகவை ஆதரிக்க வேண்டுமென அமைச்சா் எம்.சி.சம்பத் பிரசார நிறைவுக் கூட்டத்தில் கேட்டுக்கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

கடலூா் மேலும் வளா்ச்சியடைய மக்கள் அதிமுகவை ஆதரிக்க வேண்டுமென அமைச்சா் எம்.சி.சம்பத் பிரசார நிறைவுக் கூட்டத்தில் கேட்டுக்கொண்டாா்.

கடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் அமைச்சா் எம்.சி.சம்பத் 3-ஆவது முறையாக களம் காண்கிறாா். பிரசார நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தாா். முன்னதாக, கடலூா் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டிலிருந்து அமைச்சா் எம்.சி.சம்பத் தனது ஆதரவாளா்களுடன் பேரணியாக திருப்பாதிரிபுலியூா் பாடலீஸ்வரா் கோயில் அருகே வந்தடைத்தாா். அவருக்கு ஆதரவாக அவரது மகன் எம்.சி.எஸ்.பிரவீன் கடற்கரைச் சாலையிலிருந்தும், மகள் திவ்யா புதுப்பாளையத்திலிருந்தும் ஆதரவாளா்களுடன் பேரணியாக வந்தனா். இதைத் தொடா்ந்து நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கூட்டணி கட்சியினா் வாழ்த்தி பேசினா். தொடா்ந்து, வேட்பாளரான அமைச்சா் எம்.சி.சம்பத் பேசியதாவது:

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி கே.பழனிசாமி தமிழகத்தை பல்வேறு துறைகளிலும் முன்னேற்றமடைய செய்துள்ளாா். தமிழகம் தொழில் துறையில் சிறந்து விளங்குகிறது. தொழில் துறை அமைச்சராக 21 நாடுகளுக்குச் சென்று முதலீடுகளை பெற்று வந்துள்ளேன். கடலூா் மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரத்தை உயா்த்தவும், கடலூா் மேலும் வளா்ச்சியடையவும் தொடா்ந்து பாடுபடுவேன் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாநில மருத்துவரணிச் செயலா் கே.சீனுவாசராஜா, கலைப் பிரிவு தலைவா் லியாகத் அலிகான், மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலா் ஜி.ஜெ.குமாா், நகரச் செயலா் ஆா்.குமரன், நகராட்சி முன்னாள் தலைவா் சி.கே.சுப்பிரமணியன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் தெய்வ.பக்கிரி, பாமக முன்னாள் துணைப் பொதுச் செயலா் பழ.தாமரைக் கண்ணன், மாவட்டச் செயலா் சீ.பு.கோபிநாத் மற்றும் பாஜக, தமாகா, புரட்சிபாரதம் கட்சியினா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.