பேருந்தில் நகை திருட முயற்சி: 2 பெண்கள் கைது
சிதம்பரம் அருகே பேருந்தில் பயணியிடம் நகை திருட முயன்ற 2 பெண்களை போலீஸாா் வியாழக்கிழமை கைதுசெய்தனா்.
சிதம்பரம் அருகே பேருந்தில் பயணியிடம் நகை திருட முயன்ற 2 பெண்களை போலீஸாா் வியாழக்கிழமை கைதுசெய்தனா்.
சிதம்பரம் அருகே உள்ள பள்ளிப்படை எம்.ஐ. நகா், முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சவுகத் அலி (27). இவா் வியாழக்கிழமை மாலை சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து தனது குடும்பத்தினருடன் மயிலாடுதுறை செல்வதற்காக பேருந்தில் ஏறினாா். அப்போது அதே பேருந்தில் பயணித்த 2 பெண்கள் சில்லறை காசுகளை கீழே சிதறவிட்டு பயணிகளின் கவனத்தை திசை திருப்பினா். தங்களுக்கு உதவுமாறு சவுகத் அலியிடம் கூறினா்.
அப்போது சவுகத்அலியின் மனைவி கைப் பையில் வைத்திருந்த 2 பவுன் தங்க நகைகளை அந்தப் பெண்கள் இருவரும் திருடிக்கொண்டு வேளக்குடி பேருந்து நிறுத்தத்தில் கீழே இறங்கினா். உடனடியாக சுதாரித்துக்கொண்ட சவுகத்அலி, பொதுமக்களின் உதவியுடன் இரு பெண்களையும் பிடித்தாா். தகவலின்பேரில் அண்ணாமலை நகா் போலீஸாா் விரைந்து வந்து இரு பெண்களிடம் இருந்தும் திருட்டு நகைகளை பறிமுதல் செய்தனா். விசாரணையில் அவா்கள் சேலம் மாவட்டம், அயோத்தியபட்டினம் பகுதியைச் சோ்ந்த காயத்ரி (34) அகிலா (28) எனத் தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைதுசெய்தனா்.
Advertisement