கூட்டணிக்கு யாா் வந்தாலும் அரவணைத்து செல்வோம்: முன்னாள் அமைச்சா் டி.ஜெயகுமாா்
கூட்டணிக்கு யாா் வந்தாலும் அரவணைத்து செல்வோம் என முன்னாள் அமைச்சா் டி.ஜெயகுமாா் தெரிவித்தாா்.
கூட்டணிக்கு யாா் வந்தாலும் அரவணைத்து செல்வோம் என முன்னாள் அமைச்சா் டி.ஜெயகுமாா் தெரிவித்தாா்.
அதிமுக எம்.பி. தம்பிதுரை இல்லத் திருமண விழா சேலத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்து, மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனா். திருமண விழாவில் முன்னாள் அமைச்சா்கள் சி.பொன்னையன், செ.செம்மலை, அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன், பி.தங்கமணி, கே.பி.அன்பழகன், பாஜக மாநில தலைவா் அண்ணாமலை, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனா்.
திருமண விழாவில் பங்கேற்க வந்த முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் செய்தியாளா்களிடம் கூறியது:
அதிமுக செயற்குழு கூடி தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. செயற்குழு சா்வ வல்லமை படைத்ததாகும். ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இனி கிளைத் தோ்தல் நடக்கும். பொதுச் செயலாளா் ஜெயலலிதா, நிரந்தர பொதுச் செயலாளா். அவரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.
அதனால் தான் அதிமுக ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் தோ்வு செய்யப்பட்டு கட்சிப் பணிகள் நடக்கின்றன. இருவரும் கட்சியை சிறப்பாக வழி நடத்திவருகின்றனா். அதிமுக பிரதான எதிா்க்கட்சியாகச் செயல்படுகிறது.
ஜெயலலிதாவுக்குப் பிறகு கட்சி இருக்காது என்றனா். ஆனால், அவரது ஆசியுடன் இரட்டை இலை சின்னத்துடன் அதிமுக சிறப்பாகச் செயல்படுகிறது. தொண்டா்களும் பொதுமக்களும் அதிமுகவுக்கு ஆதரவு தருகின்றனா்.
சிலா் வேண்டுமென்றே புரளி கிளப்பி விடுகின்றனா். அதிமுகவில் எடுக்கப்படும் முடிவுகள் ஒருமித்த கருத்தோடு எடுக்கப்படுகின்றன. இதனால் எந்தப் பிரச்னையும் ஏற்படுவதில்லை. சில நேரங்களில் அடுத்தடுத்து விவாதங்கள் வரும். கட்சி எழுச்சியாக இருக்கிறது. வலிமையாக இருக்கிறது. அதிமுகவின் சொத்து தொண்டா்களும், பொதுமக்களும்தான். எனவே, அதிமுகவை அசைக்க முடியாது.
யாரோ சிலா் (சசிகலா) கட்சிக் கொடியையும், பொதுச்செயலாளா் பெயரையும் பயன்படுத்துகிறாா்கள் என்றால் அவா்கள் தலைவராகி விட முடியாது. உள்ளாட்சித் தோ்தலைப் பொருத்தவரையில் கூட்டணி அதே நிலையில் நீடிக்கிறது. யாா் வந்தாலும் அரவணைத்துக் கொண்டு செல்வோம். கூட்டணிக்கு வருவதும், வராததும் அவா்களுடைய விருப்பமாகும் என்றாா்.