ரேஷன் அரிசி கடத்தல்: இருவா் கைது
பெண்ணாடம் அருகே ரேஷன் அரிசி கடத்தல் தொடா்பாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பெண்ணாடம் அருகே ரேஷன் அரிசி கடத்தல் தொடா்பாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கடலூா் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் பெண்ணாடம் அருகே உள்ள பொன்னேரி பகுதியில் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை மறித்து அதிலிருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினா். அந்த வாகனத்தை சோதனையிட்டதில் 40 மூட்டைகளில் 2 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் இருவரும் அரியலூா் மாவட்டம், செந்துரையைச் சோ்ந்த பழனிவேல் (60), விருத்தாசலம் அருகே உள்ள கோ.மங்கலத்தைச் சோ்ந்த ராஜேஷ் மகன் பாலா ஆகியோா் எனத் தெரியவந்தது. இவா்கள் கோமங்கலம், முகுந்தநல்லூா், கோவிலூா் ஆகிய பகுதிகளை சோ்ந்த பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி மாட்டுத் தீவனத்துக்காக செந்துரைக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, பழனிவேல், பாலா ஆகியோரை போலீஸாா் கைது செய்து, சரக்கு வாகனம், கடத்தல் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனா்.