முகப்பு
கடலூர்

கடலூர் அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்?: போலீஸார் விசாரணை

கடலூர் அரசு மருத்துவமனையில் இருந்து குழந்தை கடத்தப்பட்டதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:31 PM
பகிர்:

கடலூர் அரசு மருத்துவமனையில் இருந்து குழந்தை கடத்தப்பட்டதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம் விசூரைச் சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி பாக்கியலட்சுமி (24). ஏற்கனவே 2 வயதில் பெண்குழந்தை உள்ள நிலையில் இரண்டாவது பிரசவத்திற்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, வெள்ளிக்கிழமையன்று பெண்  குழந்தை பிறந்தது. 
இந்நிலையில், இன்று மாலையில் பாக்கியலட்சுமியுடன் இருந்த அவரது மாமியார் கசப்பாயி தான் மருத்துவமனை வளாகத்திலுள்ள  கோயிலுக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். 
அவர் சென்ற சிறிது நேரத்தில் அவரை சந்தித்த சுமார் 25 வயது பெண் ஒருவர், குழந்தையை மாமியார் வாங்கி வரச் சொன்னதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரும் குழந்தையை அப்பெண்ணிடம் கொடுத்துள்ளார். 
சிறிது நேரம் கழித்து மாமியார் மட்டுமே திரும்பி வந்ததால் அதிர்ச்சியடைந்த பாக்கியலட்சுமி. குழந்தை குறித்து கேட்டபோது, தான் யாரிடமும் குழந்தையை வாங்கி வரச் சொல்லவில்லையென கசப்பாயி தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பாக்கியலட்சுமி இதுகுறித்து கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 
போலீஸார், சிசிடிவி  காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது அப்பெண் ஆட்டோவில் குழந்தையுடன் ஏறி பேருந்து நிலையம் சென்றது தெரிய வந்தது. எனவே, குழந்தை கடத்தப்பட்டாரா அல்லது மீண்டும் பெண் குழந்தை பிறந்ததால் தாயாரே மற்றவருக்கு வழங்கினாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →