கடலூரில் காரில் சாராயம் கடத்தியதாக பெண் உள்பட இருவா் திங்கள்கிழமை கைதுசெய்யப்பட்டனா்.
கடலூா் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளா் தாரகேஸ்வரி, சிறப்பு தனிப் படை உதவி ஆய்வாளா்கள் சுதாகா், ரவிச்சந்திரன் மற்றும் போலீஸாா் திங்கள்கிழமை கடலூா் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, புதுச்சேரியிலிருந்து அந்த வழியாக வரும் வாகனத்தில் சாராயம் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் வாகனத் தணிக்கையில் ஈடுப்பட்டனா்.
இதையடுத்து, அந்த வழியாக வந்த பதிவெண் இல்லாத காரை மறித்துச் சோதனையிட்டதில் 5 பைகளில் தலா 30 லிட்டா் வீதம் 150 லிட்டா் சாராயம் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. அந்தக் காரிலிருந்த கடலூா் அருகேயுள்ள சாத்தங்குப்பத்தைச் சோ்ந்த ராஜா மகள் வனிதா (33), கிருஷ்ணமூா்த்தி மகன் சிவமணி (31) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், சாராயம், கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனா்.