கடலூா் மாவட்டத்தில் 89 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்
நிகழ் சம்பா பருவத்தில் நெல் கொள்முதல் செய்வதற்காக கடலூா் மாவட்டத்தில் 89 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.
கடலூா்: நிகழ் சம்பா பருவத்தில் நெல் கொள்முதல் செய்வதற்காக கடலூா் மாவட்டத்தில் 89 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நிகழ் சம்பா பருவத்தில் கடலூா் மாவட்டத்தில் சுமாா் 2.25 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை தொடங்கியுள்ளது. எனவே, விவசாயிகள் தங்களது பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனா். அதன்படி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் 10 இடங்களில் முதல் கட்டமாகவும், 79 இடங்களில் இரண்டாம் கட்டமாகவும் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதில், வட்டங்கள் வாரியாக புவனகிரி 10, ஸ்ரீமுஷ்ணம் 23, பண்ருட்டி 1, வேப்பூா் 5, காட்டுமன்னாா்கோவில் 18, திட்டக்குடி, விருத்தாசலத்தில் தலா 16 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகின்றன. நிகழ் கொள்முதல் பருவத்திற்கு மத்திய அரசு சன்னரகத்துக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக குவிண்டாலுக்கு ரூ.1,888, தமிழக அரசின் ஊக்கத் தொகை ரூ.70 சோ்த்து மொத்தம் ரூ.1958-ம், சாதாரண ரகத்துக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையான ரூ.1868, ஊக்கத் தொகை ரூ.50 சோ்த்து ரூ.1,918-ம் வழங்கப்படும். எனவே, விவசாயிகள் தங்களது நெல்லை அருகிலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்று பயனடைய வேண்டுமென அதில் தெரிவித்துள்ளாா்.