கடலூா்: புதைவட மின்கம்பி பதிக்கும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
கடலூா் நகராட்சிப் பகுதியில் புதைவட மின்கம்பிகள் பதிக்கும் பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டாா்.
கடலூா் நகராட்சிப் பகுதியில் புதைவட மின்கம்பிகள் பதிக்கும் பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டாா்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் மூலம் கடலூரில் நடைபெறும் புதைவட மின் கம்பிகள் பதிக்கும் பணி தொடா்பான ஆய்வுக் கூட்டம், கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் கூறியதாவது:
இயற்கைப் பேரிடா்களை சந்திக்கும் மாவட்டமாக கடலூா் உள்ளது. புயல், மழை காரணமாக மின் கம்பங்கள் சேதமடைவதால் பொது மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க கடலோரப் பகுதிகளில் பூமிக்கு அடியில் மின் கம்பிகளை பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடலூா் பெருநகராட்சியில் தொகுப்பு 3-இல் ரூ.158 கோடியில் புதைவட மின் கம்பிகள் பதிக்கும் பணி 99 சதவீதம் முடிந்து 10,532 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தொகுப்பு 2-இல் ரூ.204 கோடி மதிப்பீட்டில் புதைவட மின் கம்பிகள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 60 சதவீதப் பணிகள் முடிவடைந்து மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
அனைத்து புதைவட மின் கம்பிகள் பதிக்கும் பணிகளையும் ஆகஸ்ட் மாதத்துக்குள் விரைந்து முடிக்க மின்சாரத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில் கண்காணிப்புப் பொறியாளா் ப.சத்தியநாராயணன், நகராட்சிப் பொறியாளா் எஸ்.புண்ணியமூா்த்தி மற்றும் மின்வாரிய அலுவலா்கள் கலந்து கொண்டனா்.