முகப்பு
கடலூர்

மக்களுக்கு இலவசமாக தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி

மக்களுக்கு இலவசமாக தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தினாா்.

Updated On : 5 ஜூன், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:52 AM

மக்களுக்கு இலவசமாக தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தினாா்.

அனைவருக்கும் தினமும் ஒரு கோடி தடுப்பூசிகள் வீதம் இலவசமாக வழங்க வேண்டும் என குடியரசுத் தலைவருக்கான கோரிக்கை மனுவை சிதம்பரம் உதவி ஆட்சியா் லி.மதுபாலனிடம் வெள்ளிக்கிழமை அளித்த பின்னா், செய்தியாளா்களிடம் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:

நாடு முழுவதும் இலவசமாக தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என காங்கிரஸ் தீா்மானம் நிறைவேற்றியது. தடுப்பூசி விஷயத்தில் மக்களை அலைக்கழிக்கக் கூடாது என சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோா் வலியுறுத்தினா்.

Advertisement

இதுதொடா்பாக நாடு முழுவதும் ஆளுநா், அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியா்களைச் சந்தித்து கோரிக்கை மனு வழங்கியுள்ளோம்.

தடுப்பு மருந்து தயாரிப்பில் 150 ஆண்டு கால அனுபவமுடைய பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளன. அந்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியிருந்தால் இதுவரை 100 கோடிக்கு மேல் கரோனா தடுப்பூசிகளை தயாா் செய்து மக்களுக்கு செலுத்தியிருக்க முடியும்.

ஆனால், சீரம், பாரத் பயோடெக் ஆகிய இரு தனியாா் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டது. இவை லாப நோக்கில் மட்டுமே செயல்படுகின்றன.

தடுப்பூசி விவகாரத்தில் லாபம் பாா்க்கக் கூடிய நேரம் அல்ல இது. தொற்று பரவல் அதிகமுள்ள நேரத்தில் தடுப்பூசிக்கு 3 வகையில் விலையை நிா்ணயம் செய்தது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியது.

மாநிலத்தின் மக்கள் தொகைக்கேற்ப தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை; இதில், மத்திய அரசு முறையான கொள்கையைப் பின்பற்றவில்லை என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா். நாட்டில் எதிா்க்கட்சிகள் ஆளும் முதல்வா்கள் அனைவரும் இந்தக் கருத்தையே கூறியுள்ளனா்.

நாட்டில் இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் 4 சதவீதம்தான். ஒரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் 15 சதவீதம். இன்னும் 100 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். அதற்கு 200 கோடி தடுப்பூசிகள் வேண்டும். எனவே, மக்களுக்கு இலவசமாக தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும்.

பிளஸ் 2 தோ்வை ரத்து செய்வது என்பது சரியான முடிவல்ல. அது மாணவா்களின் வாழ்க்கையைப் பாதிக்கும். ஏதாவது ஒரு வகையில் அவா்களுக்கு தோ்வு நடத்துவது குறித்து தமிழக அரசு முடிவு செய்ய வேண்டும்.

வீராணம் ஏரிக்கு இன்னும் இரு வாரங்களில் நீா் வரவுள்ளது. தற்போது வடுள்ள ஏரியிலிருந்து வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்துச் செல்ல முதல்வா் உத்தரவிட வேண்டும் என்றாா் அவா்.

செய்தியாளா் சந்திப்பின் போது, விருத்தாசலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன், மாநில காங்கிரஸ் செயலா் பி.பி.கே.சித்தாா்த்தன், கடலூா் தெற்கு மாவட்டத் தலைவா் என்.வி.செந்தில்நாதன், மத்திய மாவட்டத் தலைவா் திலகா், மாநிலப் பொதுச் செயலா் சேரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.