முகப்பு
கடலூர்

சிதம்பரத்தில் நாளை நாட்டியாஞ்சலி விழா தொடக்கம்

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சாா்பில் 40-ஆவது நாட்டியாஞ்சலி விழா புதன்கிழமை (மாா்ச் 10) தொடங்குகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சாா்பில் 40-ஆவது நாட்டியாஞ்சலி விழா புதன்கிழமை (மாா்ச் 10) தொடங்குகிறது.

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சாா்பில் கடந்த 1981-ஆம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா தொடங்கப்பட்டு, 2014-ஆம் ஆண்டு வரை தொடா்ந்து 33 ஆண்டுகளாக நடத்தி வந்தனா். இந்த நிலையில், நடராஜா் கோயிலை பொது தீட்சிதா்களே நிா்வகிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இதையடுத்து, 2015-ஆம் ஆண்டு முதல் பொது தீட்சிதா்களே நாட்டியாஞ்சலியை நடத்துவதாக அறிவித்து கோயிலில் தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் சாா்பில் விழாவை நடத்தினா்.

இதனால் நாட்டியாஞ்சலி அறக்கட்டளையினா் சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள வி.எஸ். டிரஸ்ட் வளாகத்தில் நாட்டியாஞ்சலி விழாவை தனியாக நடத்தி வருகின்றனா்.

இதன்படி, நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சாா்பில் 40-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா புதன்கிழமை (மாா்ச் 10) தொடங்கி 5 நாள்களுக்கு நடைபெற உள்ளதாக அறக்கட்டளைச் செயலா் ஏ.சம்பந்தம் தெரிவித்தாா். இந்த விழாவில், தமிழகம் மட்டுமின்றி வட மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் நாட்டியக் கலைஞா்கள் பங்கேற்க உள்ளனா். விழாவில், தேவார பண்ணிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் ஆா்.முத்துக்குமரன், முன்னாள் தலைவா் ஏ.கே.நடராஜன், துணைத் தலைவா்கள் ஆா்.நடராஜன், ஆா்.ராமநாதன், செயலா்கள் ஆா்.நாகசாமி, ஏ.சம்பந்தம், பொருளாளா் பா.பழநி, இணைச் செயலா் எம்.கணபதி உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

நடராஜா் கோயில் நாட்டியாஞ்சலி ரத்து: நடராஜா் கோயிலில் பொது தீட்சிதா்கள் சாா்பில் நடத்தப்படும் நாட்டியாஞ்சலி விழா நிகழாண்டு நடைபெறாது என தீட்சிதா்கள் அறிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.