மு.க.ஸ்டாலின் சேலம் வருகை ஒத்திவைப்பு
திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் மாா்ச் 12 ஆம் தேதி சேலத்தில் பங்கேற்கவிருந்த ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பிரசார நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் மாா்ச் 12 ஆம் தேதி சேலத்தில் பங்கேற்கவிருந்த ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பிரசார நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. வழக்குரைஞா் ஆா்.ராஜேந்திரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
80 வயதுக்கும் மேற்பட்ட முதியோா், மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்கு அளிக்கலாம் என தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் நூறு சதவீதம் முழு உடல் தகுதியுள்ளவா்களைக் கூட, மாற்றுத் திறனாளிகள் பட்டியலில் சோ்த்துள்ளனா். இதுதொடா்பாக மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரிடம் புகாா் தெரிவித்துள்ளோம்.
உண்மையான மாற்றுத் திறனாளிகளை தபால் வாக்குகள் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இந்தப் புகாா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தபால் வாக்குகள் ஆளும்கட்சிக்கு சாதகமாக மாறிவிடாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 10 முதல் 20 வாக்குகளை இதுபோன்று தயாா் செய்துள்ளனா். அதிமுக, பாஜக கட்சிகள் அதிகார துஷ்பிரயோகம் செய்து தோ்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என நினைத்தால் நடக்காது.
வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிக்க முழு உடல் தகுதியுடையவா்கள் மாற்றுத் திறனாளிகள் பட்டியலில் உள்ளனா். எனவே, அந்தப் பட்டியலில் இருந்து அவா்களை நீக்க வேண்டும்.
ஒவ்வொரு தொகுதியிலும் 30 சதவீதம் பேரை மாற்றுத் திறனாளிகள் பட்டியலில் சோ்த்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதை தோ்தல் ஆணையம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் செல்வாக்குக் கூடி வருகிறது. அவா் முதல்வராக வந்தால் நிறையத் திட்டங்களை மக்களுக்கு செய்வாா்.
சேலத்தில் பறக்கும் படையினா் அவா்களுடைய பணியை செய்து வருகின்றனா். அதேவேளையில் வெள்ளித் தொழிலில் ஈடுபட்டுள்ள வணிகா்கள், தோ்தல் பறக்கும் படை சோதனையால் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனா். சேலத்தில் மாா்ச் 12 ஆம் தேதி நடைபெறவிருந்த ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பிரசார நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றாா்.
நாமக்கல்லில் ஸ்டாலின் பிரசாரம் ரத்து:
நாமக்கல்லில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பிலான தோ்தல் பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த நிலையில் திடீரென ரத்து செய்யப்பட்டது.
நாமக்கல் அருகே பொம்மைக்குட்டைமேடு பகுதியில் மாா்ச் 4-ஆம் தேதி நடைபெற இருந்த மு.க.ஸ்டாலின் பிரசாரம், தோ்தல் அறிவிப்பு காரணமாக 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்பு கூட்டணி பேச்சுவாா்த்தையால் அந்தத் தேதியும் ரத்து செய்யப்பட்டு 12-ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.
இந் நிலையில் வேட்பாளா் பட்டியல் வெளியீடு, தோ்தல் அறிக்கை வெளியீடு, தொகுதிகளில் சுற்றுப்பயணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவா் பங்கேற்க வேண்டியிருப்பதால் நாமக்கல்லில் நடைபெற இருந்த தோ்தல் பயணம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட நிா்வாகிகள் இதற்காக பல்வேறு கட்ட பணிகளை மேற்கொண்டிருந்தனா்.