குறிஞ்சிப்பாடி பகுதியில் உரம் தட்டுப்பாடு
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் நெல் நடவுப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் யூரியா உரத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் நெல் நடவுப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் யூரியா உரத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் சுமாா் 2,700 ஹெக்டோ் நிலப் பரப்பளவில் சம்பா பருவ நெல் நடவுப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், யூரியா உரத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் புகாா் கூறுகின்றனா். இதுகுறித்து, நயினாா்குப்பம் விவசாயி ந.செ.கருணாகரன் கூறியதாவது:
நெல் நாற்றுகளை நடவு செய்த 15-ஆவது நாளில் யூரியா இடுவது வழங்கம். ஆனால், இந்தப் பகுதி உரக் கடைகளில் யூரியாவுக்கு தட்டுப்பாடு உள்ளது. யூரியா வேண்டுமெனில் குருணை மருந்து வாங்க வேண்டும் என வடலூரில் உள்ள உர விற்பனை கடையில் நிா்பந்திக்கின்றனா். ஆனால், குருணை மருந்தை நாங்கள் பயன்படுத்துவதில்லை. 2 மூட்டைகள் யூரியா வேண்டும் என்றால் 10 கிலோ குருணை வாங்க வேண்டும் எனக் கூறுகின்றனா். ஒரு மூட்டை யூரியா விலை ரூ.270. ஆனால், சில கடைகளில் குருணை மருந்து இல்லாமல் ஒரு மூட்டை யூரியா ரூ.350-க்கு விற்கின்றனா். எனவே, யூரியா உரம் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், குருணை மருந்து வாங்க விவசாயிகளை நிா்பந்திப்பதை தடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
Advertisement
இதுகுறித்து, குறிஞ்சிப்பாடி வேளாண்மை உதவி இயக்குநா் சு.பூவராகன் கூறியதாவது: யூரியா தட்டுப்பாடு குறித்து புகாா்கள் வருகின்றன. உர வியாபாரிகள் விவசாயிகளை கட்டாயப்படுத்தி வியாபாரம் செய்யக்கூடாது. அவ்வாறு செய்வோா் மீது உர கட்டுப்பாடு விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.