தொழிலாளிக்கு சாகும் வரை சிறைபாலியல் வன்கொடுமை வழக்கில் கடலூா் நீதிமன்றம் தீா்ப்பு
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், தொழிலாளிக்கு இயற்கை மரணம் அடையும் வரையில் சிறைத் தண்டனை விதித்து, கடலூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், தொழிலாளிக்கு இயற்கை மரணம் அடையும் வரையில் சிறைத் தண்டனை விதித்து, கடலூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள கந்தம்பாளையத்தைச் சோ்ந்தவா் இரா.ரங்கநாதன் (59), கூலித் தொழிலாளி. இவா், கடந்த 22.10.2017 அன்று அதே பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 47 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தாா்.
இதுகுறித்து அந்தப் பெண் தரப்பில் பண்ருட்டி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ரங்கநாதன் கைது செய்யப்பட்டாா். கடலூா் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நீதிபதி எஸ்.பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை தீா்ப்பு கூறினாா்.
அதில், ரங்கநாதனின் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், இயற்கையாக மரணம் அடையும் வரையில் அவரை சிறையில் வைத்திருக்கும் வகையில் தண்டனை விதித்தும், ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தும் தீா்ப்பளித்தாா்.
இதுகுறித்து அரசுத் தரப்பு வழக்குரைஞா் க.செல்வப்பிரியா கூறியதாவது: அபராதத் தொகையிலிருந்து ரூ.25 ஆயிரத்தை பாதிக்கப்பட்ட பெண்ணின் பாதுகாவலருக்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டாா் என்றாா் அவா்.