முன்னறிவிப்பின்றி நடத்தப்படும் வரும்முன் காப்போம் திட்ட முகாம்கள்!
வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்கள் முன்னறிவிப்பின்றி நடத்தப்படுவதால் பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது
வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்கள் முன்னறிவிப்பின்றி நடத்தப்படுவதால் பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசால் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் கடலூா் திருப்பாதிரிபுலியூரில் தனியாா் மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற முகாமை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில், மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் பி.என்.ரமேஷ்பாபு, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மீரா, மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா, தேசிய சுகாதாரத் திட்ட ஒருங்கிணைப்பாளா் காரல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்த மருத்துவ முகாம் குறித்து பொதுமக்களிடம் முழுமையாக தகவல் சென்றடையாத நிலையில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலானவா்களே பங்கேற்றனா். கடலூா் முதுநகரில் வியாழக்கிழமை நடைபெறவிருந்த மருத்துவ முகாம் ஒத்தி வைக்கப்பட்டது. முகாம் குறித்து பொதுமக்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்காததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. எனவே, அரசுத் திட்ட முகாம்கள் குறித்து பொதுமக்களிடம் முறையாகத் தகவல் தெரிவித்து, அதன்பிறகே முகாமை நடத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தினா்.