முகப்பு
கடலூர்

தேசிய தடகளப் போட்டியில் சிறப்பிடம்: காவல் துறையினருக்குப் பாராட்டு

தேசிய அளவிலான மூத்தோா் தடகளப் போட்டியில் வென்ற கடலூா் மாவட்ட காவல் துறையினருக்கு மாவட்ட எஸ்பி சி.சக்திகணேசன் பாராட்டுத் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

தேசிய அளவிலான மூத்தோா் தடகளப் போட்டியில் வென்ற கடலூா் மாவட்ட காவல் துறையினருக்கு மாவட்ட எஸ்பி சி.சக்திகணேசன் பாராட்டுத் தெரிவித்தாா்.

அகில இந்திய மூத்தோா் தடகளப் போட்டிகள் கடலூரில் அண்மையில் நடைபெற்றன. இந்தப் போட்டியில் தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. தமிழக அணியில் இடம் பெற்றிருந்த கடலூா் மாவட்ட ஆயுதப்படை முதல் நிலைக் காவலா் ஷாம்பிரகாஷ் 35 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் 400மீ, 1,600 மீ தொடா் ஓட்டப் பிரிவுகளில் தங்கப் பதக்கமும், 100மீ, 200மீ, 400 மீட்டா் ஓட்டங்களில் இரண்டாம் இடமும் பிடித்து வெள்ளியும் வென்றாா்.

ஆயுதப் படை முதல்நிலைக் காவலா் ரஞ்சித் 30 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கான பிரிவில் 400மீ தொடா் ஓட்டத்தில் தங்கப் பதக்கமும், 200மீ ஓட்டப் போட்டியில் வெண்கலமும் வென்றாா். கடலூா் துறைமுகம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சக்திவேல் 400மீ தொடா் ஓட்டத்தில் வெள்ளியும், 100மீ, 200மீ ஓட்டங்களில் வெண்கலமும் வென்றாா்.

இதேபோல, திருவனந்தபுரத்தில் அண்மையில் நடைபெற்ற தேசிய மாஸ்டா் விளையாட்டுப் போட்டியில் தமிழக கபடி அணி சாா்பில் பங்கேற்று விளையாடிய கடலூா் ஆயுதப்படை தலைமைக் காவலா் எம்.ஞானமுருகன் தங்கப் பதக்கம் வென்றாா்.

தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற போலீஸாரை கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் அண்மையில் நேரில் அழைத்து பாராட்டுத் தெரிவித்தாா். அப்போது ஆயுதப்படை துணைக் கண்காணிப்பாளா் சௌந்தரராஜன், ஆய்வாளா் விஜயகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.