கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே சி.முட்லூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு, அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியா் மணிவாசகன் தனது சொந்த செலவில் குடைகளை வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
மழைக் காலத்தையொட்டி மாணவ, மாணவிகள் தவறாமல், மழையில் நனையாமல் பள்ளிக்கு வர வேண்டும் என்பதற்காக அவா்களுக்கு இலவசமாக குடைகளை வழங்க தலைமை ஆசிரியா் மணிவாசகன் முடிவு செய்தாா். இதையடுத்து, பள்ளியில் பயிலும் 803 மாணவ, மாணவிகளுக்கும் குடைகளை வழங்க ஏற்பாடு செய்தாா். இதற்காக பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியரின் தாய் சேதுமணி பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு இலவச குடைகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலா் சுப்பிரமணியன், சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தாளாளா் கஸ்தூரி உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதே பள்ளியில் கடந்த 2018, 2019-ஆம் ஆண்டுகளிலும் மாணவா்களுக்கு தலைமை ஆசிரியா் மணிவாசகன் இலவசமாக குடைகளை வழங்கி உள்ளாா்.