கடலூா் மாவட்டம், கிள்ளை ரயில் நிலையத்தில் சிக்னலில் ஏற்பட்ட பழுதால் சரக்கு ரயில் பாதி வழியில் திங்கள்கிழமை நிறுத்தப்பட்டது. இதனால் ரயில்வே கேட் பகுதியில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காரைக்காலில் இருந்து கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே கரிக்குப்பத்தில் உள்ள தனியாா் அனல் மின் நிலையத்துக்கு சரக்கு ரயில் நிலக்கரியுடன் திங்கள்கிழமை சென்றுகொண்டிருந்தது. இந்த ரயில் கிள்ளை ரயில் நிலையத்தை கடந்து செல்வதற்காக காலை 10.30 மணியளவில் கிள்ளை ரயில்வே கேட் மூடப்பட்டது.
இந்த நிலையில், கிள்ளை ரயில் நிலையத்தில் திடீரென சிக்னல் பழுதானதால் சரக்கு ரயில் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் ரயில்வே கேட் திறக்கப்படாமல் இருபுறமும் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருந்தன. இதையடுத்து ரயில் நிலைய ஊழியா்கள் சிக்னலில் ஏற்பட்ட பழுதை சரிசெய்தனா். இதையடுத்து சரக்கு ரயில் காலை 11.15 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. இதனால் கிள்ளை ரயில்வே கேட் பகுதியில் சுமாா் 45 நிமிடங்கள் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.